திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உட்பட 6 மனித படுகொலைகள் தொடர்பாக சிஐடியினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ரி.எம்.வி.பி கட்சி அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமார் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று வியாழக்கிழமை (2) உத்தரவிட்டார்.
கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் விநாயகபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து திருக்கோவிலில் உள்ள பிரதேச சபையை நோக்கி பயணித்தபோது அவரை விநாயகபுரம் கோரக்களப்பு வீதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவியார் படுகொலை செய்யப்பட்ட தனது கணவருக்கு நீதி கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.
இந்த விசாரணை கடந்த கால அரசாங்கத்தினால் கிடப்பில் இருந்து வந்துள்ளது.
இதையடுத்து, படுகொலை செய்யப்பட்டவரின் மனைவி கடந்த 2025ஆம் ஆண்டு சிஐடியினரிடம் முறைப்பாடு அளித்ததையடுத்து, விசாரணை அதிகாரிகள் தீவிர விசாரணையின் பின்னர், சந்தேகத்தின் அடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசிதரன் தவசீலன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்களை சிஐடியினர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகளை நடத்தி வந்த நிலையில், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் படுகொலை உட்பட 6 மனித படுகொலைகளுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஒரு வருட காலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்திருந்த இனியபாரதிக்கு எதிராக சிஐடியினர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (2) முன் நகர்வுப் பத்திரத்தின் ஊடாக வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை நீதவான் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது இவரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் இருந்து விடுவித்துள்ளதாக சிஐடியினர் நீதிமன்றத்துக்கு அறிவித்ததையடுத்து நீதவான் இவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை கடந்த 2005 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் திருக்கோவில் மற்றும் விநாயகபுரம் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இனியபாரதி மீது குற்றஞ்சாட்டி வருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



