ஓட ஓட விரட்டி இளம்பெண் வெட்டிக்கொலை..- கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்

 

கர்நாடக மாநிலம் பன்ட்வால் பகுதியில் பேருந்து நிலையத்திற்குள் புகுந்து இளம்பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா பேருந்து நிலையத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை(புகைப்படங்கள்- Samayam Tamil)
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பன்ட்வாலில் உள்ள பி.சி. ரோடு அரசு பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் பேருந்துக்காக இளம்பெண் ஒருவர் காத்திருந்துள்ளார்.

ஓட ஓட விரட்டி இளம்பெண் வெட்டிக்கொலை
அப்போது இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். தனது பையிலிருந்து திடீரென அரிவாளை எடுத்து இளம்பெண்ணை வெட்ட நெருங்கியுள்ளார். ஆபத்தை உணர்ந்து அந்தப் பெண் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பியோட முயன்றுள்ளார்.

ஆனால், விடாமல் துரத்திச் சென்ற அந்த நபர், பொது மக்கள் முன்னிலையிலேயே இளம்பெண்ணை ஓட ஓட விரட்டி அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார்.தாக்குதலுக்குப் பயன்படுத்திய அரிவாளை சம்பவ இடத்திலேயே வீசிவிட்டு கொலையாளி தப்பியோடும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அரிவாள் வெட்டில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண்ணை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக பன்ட்வால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.பட்டபகலில் பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

யார் இந்த லாவண்யா?
இந்த சம்பவம் குறித்து பேருந்து நிலையத்திற்கு உடனடியாக வருகை தந்த காவல் துறையினர் இளம்பெண் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளம்பெண் மங்களூரு மாவட்டம் பன்ட்வால் அருகே உள்ள உலிகிராம் பகுதியைச் சேர்ந்த லாவண்யா ( வயது 21) என்பது தெரியவந்துள்ளது.இவர் கல்லாட்கா பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் ஹோமில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட கொலையாளி, பெல்தங்கடி பகுதியைச் சேர்ந்த சேத்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

போலீசார் தீவிர விசாரணை
இந்தக் கொலைக்கான காரணம் என்ன, அவர்கள் இருவருக்கும் இடையே முன்பகை ஏதேனும் இருந்ததா? அல்லது காதல் விவகாரத்தில் கொலை செய்தாரா என்பது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் குற்றவாளியை பிடிக்க தனிபடை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில் , சேத்தன் உயிரிழந்த லாவண்யாவின் தூரத்து உறவினர் என்பதும், கடந்த சில காலமாக அவர் லாவண்யாவை ஒருதலையாகக் காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது. லாவண்யா அவரது காதலை ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவர் பேருந்து நிலையத்திற்குச் சென்று இக்கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளது முதற்கட்ட விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கர்நாடகாவில் பரபரப்பு
ஒருதலைக் காதலால் மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையத்திற்குள் இளம்பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு பன்ட்வால் நகர காவல் துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க பேருந்து நிலையப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய கொலையாளி சேத்தனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.