ஆபத்தில் இருக்கும் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் வெனிஸ்ஆபத்தில் இருக்கும் பாரம்பரிய சின்னங்கள்
உயரமான கட்டிடங்கள் கட்டுவது போன்ற வளர்ச்சி பணிகள் நிச்சியம் எதிர்மறையான தாக்கத்தையே இந்நகரத்திற்கு ஏற்படுத்தும் என எச்சரிக்கிறது யுனெஸ்கோ.
உலகின் பாரம்பரியச் சின்னங்களை பட்டியலிட்டு வரும் ஐநா சபையின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, சமீபத்தில் “ஆபத்தில் இருக்கும்” பாரம்பரியச் சின்னங்கள் என்ற புதிய பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளது. அந்தப் பட்டியலில் தற்போது வெனிஸ் நகரத்தைச் சேர்த்து பரபரப்பை உண்டாக்கியுள்ளது யுனெஸ்கோ. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரத்தையும் அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைப் பகுதிகளையும் பாதுகாக்கக் கூடிய நடவடிக்கைகளை உடனடியாக இத்தாலிய நாட்டு அதிகாரிகள் எடுக்க வேண்டும் என யுனெஸ்கோ தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மீள முடியாத ஆபத்தில் வெனிஸ் நகரம் சிக்கியுள்ளதாகவும் இதற்கு காலநிலை மாற்றம் முதல் கட்டுப்பாடற்ற சுற்றுலா வரை என பல காரணங்கள் இருப்பதாகவும் யுனெஸ்கோ தனது அறிக்கையில் கூறியுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரியாத் நகரில் நடக்கவுள்ள உலக பாரம்பரிய கமிட்டியின் கூட்டத்தில் இந்த பரிந்துரைகள் அனைத்தும் சமர்பிக்கப்படும் என தெரிகிறது.
“கட்டுப்பாடில்லாத வளர்ச்சி நடவடிக்கை, காலநிலை மாற்றம் ஏற்படுத்தியுள்ள தாக்கம், தங்கு தடையற்ற சுற்றுலா, மனிதர்களின் தலையீடு போன்ற விளைவுகளின் காரணமாக தொடர்ந்து சீரழிவை சந்தித்து வருகிறது வெனிஸ் நகரம். இந்தப் பிரபஞ்சத்தின் மதிப்புமிக்க சொத்தாக உள்ள இந்நகரம் மீளமுடியாத ஆபத்தில் இருப்பதாக” கூறுகிறது யுனெஸ்கோ.
நீண்ட நாட்களாக நீடிக்கும் இந்தப் பிரச்சனைகள் இந்நகரத்தின் உள்ளார்ந்த பண்புகளை முற்றிலும் சீரழித்துள்ளது. உயரமான கட்டிடங்கள் கட்டுவது போன்ற வளர்ச்சி பணிகள் நிச்சியம் எதிர்மறையான தாக்கத்தையே இந்நகரத்திற்கு ஏற்படுத்தும் என எச்சரிக்கிறது யுனெஸ்கோ.
அதுமட்டுமின்றி, மனிதர்களின் தலையீடும் இயற்கை மாற்றமும் இணைந்து நகரப் பகுதிகளுக்கும் கட்டுமானங்களுக்கும் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இந்தப் பிரச்சனைகள் குறித்து போதுமான அக்கறையை இத்தாலிய அரசு காட்டவில்லை. இதனால் இணைந்து பணியாற்றுவதில் மேலும் தடைகளை ஏற்படுத்தும் என யுனெஸ்கோ கருதுகிறது.
உலகமெங்கும் உள்ள இடங்களுக்கு பாரம்பரிய சின்னம் என்ற முத்திரை வழங்குவதை கண்காணித்து வரும் உலக பாரம்பரிய கமிட்டி, வருகிற செப்டம்பர் மாதம் 10-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ரியாத் நகரில் கூடவுள்ளது. உலக பாரம்பரியச் சின்னத்தில் சேர்க்கப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 53 இடங்களை இவர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வார்கள்.
ஒவ்வொரு வருடமும் கலாச்சாரம், இயற்கை மற்றும் இயற்கையோடு பிணைந்த கலாச்சாரம் என்ற அடிப்படையில் உலகில் உள்ள இடங்களை தேர்வு செய்து, உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கிறது யுனெஸ்கோ.
இதுபோன்ற உலக பாரம்பரியச் சின்னங்களை எதிர்காலத்தில் முறையாக பராமரிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே “ஆபத்தில் இருக்கும்” பாரம்பரியச் சின்னங்கள் என்ற புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமான அளவு திருப்திகரமாக இல்லையென்றால், தவிர்க்க முடியாத சுழ்நிலையில் குறிப்பிட்ட இடத்திற்கு வழங்கப்பட்ட உலக பாரம்பரியச் சின்னம் என்ற அடையாளம் பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.