நகரும் நடைபாதையில் சிக்கிய இளம்பெண்... துண்டான கால்... தாய்லாந்தில் ஷாக் சம்பவம்..! கால் இழந்த பெண்கால் இழந்த பெண்
02 Jul,2023
இளம் பெண் ஒருவர் ஏர்போர்ட்டில் நகரும் நடைபாதையில் செல்லும் போது அவரது கால்கள் அதில் சிக்கி துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் முக்கிய நாடுகளில் ஒன்று தாய்லாந்து. சர்வதேச அளவில் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாய்லாந்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அப்படிப்பட்ட பரபரப்பான விமான நிலையம் ஒன்றில் நகரும் நடைபாதையில் சிக்கி இளம்பெண் கால்களை இழந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாங்காக்கில் உள்ள டான் முயாங் சர்வதேச விமான நிலையத்தில் நகரும் நடைபாதையில் சிக்கி தாய்லாந்து பெண் தனது இடது காலின் ஒரு பகுதியை இழந்துள்ளார். அந்த விமான நிலையத்தில் விமானத்தில் ஏற ஏறுவதற்காக ஒரு பெண் வந்துள்ளார். அவர் தனது சூட்கேஸ்களுடன் ட்ராலேட்டர் எனப்படும் நகரும் நடைபாதையில் சென்று கொண்டிருந்த போது, அவர் சூட்கேஸ் மீது தடுமாறி விழுந்ததாகவும், அப்போது அவரது கால் நகரும் நடைபாதையில் சிக்கி இழுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கால் நடைபாதையில் சிக்கிய நிலையில், அந்த பெண் கதறித் துடித்துள்ளார். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற விமான நிலைய மருத்துவ ஊழியர்கள் அந்த பெண்ணுக்கு முதலுதவி கொடுத்து சிகிச்சை அளித்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காலின் பாதி பகுதி நீக்கப்பட்டது. தற்போது அவர் நலமமாக இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் கூறியுள்ளார்.
இந்த விபத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டான் முயாங் சர்வதேச விமான நிலைய இயக்குநர் கருண் தனகுல்ஜீரபட், "நடைபாதை பெல்ட்டின் கீழ் சூட்கேஸ் சக்கரங்களும் கிடந்தன. அதை நாங்கள் எடுத்துள்ளோம். அந்த நடைபாதை தினசரி ஆய்வு செய்யப்படு வருகிறது. விபத்து குறித்துக் கூடுதல் தகவல்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த பயணிக்குத் தேவையான மருத்துவச் செலவு மற்றும் இழப்பீட்டுத் தொகையை ஏர்போர்ட் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும்" என்றார்.
தொடர்ந்து, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜடடாச்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த நகரும் நடைபாதையை 1996 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வந்ததாகவும், வரும் 2025ஆம் ஆண்டு இந்த நகரும் நடைபாதை புதிதாக மாற்ற இருந்ததாகவும் விமான நிலைய இயக்குநர் கூறியுள்ளார். இந்த விபத்துக்குப் பிறகு, விமான நிலையத்தில் உள்ள அந்த நகரும் நடைபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டு பிறகு சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டிருந்தால், உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.