உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், ஒரு மாதத்தை எட்ட உள்ள நிலையில், தலைநகர் கீவ் நகரின் புறநகர் பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. அதே நேரத்தில் துறைமுக நகரான மரியுபோலைக் கைப்பற்ற ரஷ்யா கடுமையாக போராடி வருகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுடன் எல்லைப் பிரச்னை தீவிரமடைந்ததை தொடர்ந்து, அதன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த மாதம் 24ம் தேதி துவங்கிய இந்தப் போர், ஒரு மாதத்தை எட்ட உள்ளது.
திணறல்
தலைநகர் கீவ் நகரை முழுமையாக கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த அதன் புறநகர் பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.இதையடுத்து, கீவ் நகருக்குள் வருவதற்கான முக்கிய நெடுஞ்சாலை, உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
அதே நேரத்தில், கீவ் நகரை நோக்கி, ஏவுகணைகள் மற்றும் பீரங்கி வாயிலாக ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.இதற்கிடையே, தெற்கே உள்ள முக்கிய துறைமுக நகரான மரியுபோலைப் பிடிக்க ரஷ்யா கடுமையாக போராடி வருகிறது.இதற்காக ரஷ்யா வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. இங்கு மின்சாரம், குடிநீர், உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், நகரை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.இந்தப் போரால், உக்ரைனில் இருந்து ஒரு கோடி மக்கள் வெளியேறிஉள்ளதாக கூறப்படுகிறது. அதில், 35 லட்சம் பேர் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். அதே நேரத்தில், 65 லட்சம் பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.
மறுப்பு
இதுவரை, 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக, ஐ.நா., கூறுகிறது. ஆனால், உண்மையான பலி எண்ணிக்கை பல மடங்கு இருக்கும் என கூறப்படுகிறது.இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, 'டிவி' வாயிலாக உரையாற்றி, மக்களுக்கு உற்சாகமூட்டி வருகிறார்.
மேலும், பல நாட்டுத் தலைவர்களுடன் பேசி, ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி, இத்தாலி எம்.பி.,க்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசினார்.மேலும் போப் பிரான்சிஸ் உடனும் அவர் தொலைபேசி வாயிலாக பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் பேச்சு நடத்தி வருகின்றன. ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சரணடைய வேண்டும் என்ற ரஷ்யா வின் கோரிக்கையை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது.
சர்க்கரைக்கு போராட்டம்
உக்ரைன் மீதான போர், பல நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையின் தாக்கம் ரஷ்யாவில் வெளிப்படையாக தெரியத் துவங்கி உள்ளது. குறிப்பாக சர்க்கரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பல கடைகள், வணிக நிறுவனங்கள் அதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளன. இதையடுத்து பொதுமக்கள் சர்க்கரை வாங்க முட்டி மோதும், 'வீடியோ'க்கள் சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளன.
இதுபோல பல வீட்டு உபயோக சாதனங்கள் உள்ளிட்டவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்உக்ரைனின் தெற்கே உள்ள கெர்சான் நகரை ரஷ்யா கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆயுதம் இல்லாமல் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதாக,உக்ரைன் அரசு கூறியுள்ளது.