தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் ஆஸ்திரியா நாடு
02 Feb,2022
ஒவ்வொரு அரசாங்கமும் அந்நாட்டு மக்களை கோவிட் தொற்றுகளிலிருந்து காப்பாற்றும் நோக்கில் அவர்களை தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள நிர்பந்தித்து வருகிறது. தற்போது ஆஸ்திரியாவில் பிறப்பிக்கப்பட்ட புதிய ஆணையின் கீழ் கோவிட் தடுப்பூசி போடாதவர்களுக்கு 600 யூரோ ($670) அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை எதிர்த்து கிட்டத்தட்ட வாரந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் வந்து போராட்டம் செய்கின்றனர். இதேபோல மற்ற நாடுகளிலும் தடுப்பூசிகளை கட்டாயப்படுத்தி செலுத்துவதா அல்லது தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பதா என்று யோசித்து வருகின்றனர். பிரான்ஸ் அரசு மக்களின் சிவில் உரிமைகளை மீறுவதாக மக்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதிகமான சுகாதாரப் பணியாளர்கள் ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்துள்ளனர், மற்ற பணியாளர்களுக்கு கூடுதல் நேரம் அளித்தால் அவர்களும் தடுப்பூசிகளை செலுத்தி கொள்வார்கள் என்று மருத்துவரும் தடுப்பூசி நிபுணருமான பீட்டர் இங்கிலிஷ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், மக்களில் ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள தயங்குகின்றனர், தடுப்பூசி மீது அவநம்பிக்கை வைத்துள்ளனர். இவ்வாறு நம்பிக்கையற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது கடினம், ஆனால் தயக்கத்தோடு இருப்பவர்களுக்கு எளிதாக தடுப்பூசி செலுத்திவிடலாம் என்றும் கூறியுள்ளார்.
ஸ்வீடனில் 90 சதவீதத்திற்கும் மேலானவர்கள் எவ்வித வற்புறுத்தலும் இல்லாமல் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். பிரான்சில் தடுப்பூசி போடாதவர்கள் யாரும் உணவகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் போன்ற இடங்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு முன்னர் வந்த பல நோய்களுக்கு தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள மக்கள் பயந்தனர், இதற்கென அரசாங்கம் அபராதம் விதித்தல், வழக்கு பதிவு செய்தல் போன்ற பல நடவடிக்கைகளை எடுத்தது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல மக்கள் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள தொடங்கிவிட்டனர். இதேபோல தற்போது கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பல அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.