நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா பரவுவதால் மாஸ்க் அணிய உத்தரவு
18 Aug,2021
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. நியூசிலாந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக நியூசிலாந்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது.
இந்நிலையில், நியூசிலாந்து நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவியுள்ளது. ஆக்லாந்து பகுதியில் வசித்து வந்த 58 வயதுடைய ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஆக்லாந்து மற்றும் கோரமண்டல் பகுதியில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில், நியூசிலாந்தில் மீண்டும் மாஸ்க் அணிய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் நிலையங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு ஊரடங்கின் போது சென்றால் கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்று நியூசிலாந்து பிரதமர் அறிவித்துள்ளார். வைரஸ் மரபணு வரிசை சோதனையில் தற்போது நியூசிலாந்தில் பரவியிருப்பது டெல்டா வகை கொரோனா என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.