இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலி
27 Feb,2020
* அமெரிக்காவில் இ-சிகரெட் புகைப்பதால் ஏற்படும் நோய் காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் அங்கு இ-சிகரெட் தொடர்பான நோயிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தோனேசியாவின் மலுகு தீவில் உள்ள துவால் நகரை மையமாக கொண்டு நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.
* மலேசியாவில் ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகாதீர் முகமது, நாட்டில் ஒற்றுமையான அரசாங்கம் உருவாக வேண்டும் என்றும், பிரதமர் பதவிக்கு திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
* ஜப்பானில் கொரோனா தாக்குதல் காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பின்னர் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்ட ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பல் பயணிகள் 45 பேருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலி
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஜகார்த்தா மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
ஜகார்த்தாவின் கிழக்கு பகுதிகளில் உள்ள தாழ்வான குடியிருப்புகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வெள்ளத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 3 பேர் மாயமாகி உள்ளனர். மழை வெள்ளத்தால் மின்சாரம், தகவல் தொடர்பு மற்றும் சாலை போக்குவரத்து உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.