சீனாவைத் தொடர்ந்து, தென்கொரியாவில் வேகவேகமாக பரவத் தொடங்கியிருக்கிறது.கொரோனா வைரஸ்,
22 Feb,2020
சீனாவின் ஊகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவெடுத்த கொரோனா வைரஸ், அங்கிருந்து, 28 நாடுகளுக்கு பரவியது. இந்த கொரானா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2247ஆக உயர்ந்திருக்கிறது. கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 76,900 ஆக உயர்ந்துள்ளது.
தென்கொரியாவில், கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 204ஆக அதிகரித்துள்ளது. ஒரே இடத்தில் மக்கள் அதிகமாக கூடுவதை தடுத்திட, பொதுக்கூட்டங்களுக்கும், பேரணிகளுக்கும், தென்கொரிய அரசு தடை விதித்திருக்கிறது.
கொரானா குறித்த வதந்தியால், சீனாவின் ஊகானில் இருந்து உக்ரைன் அழைத்து வரப்பட்ட 72 பேர், 6 பேருந்துகளில் சென்றபோது, திடீரென திரண்ட போராட்டக்காரர்கள் வழிமறித்துத் தாக்கியதில், 9 போலீசார் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
கொரானா எதிரொலியால், விமான நிறுவனங்கள், சுமார் 3,000 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு இழப்பை எதிர்கொண்டிருப்பதாக, பன்னாட்டு விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்திருக்கிறது.
சீன புத்தாண்டு விடுமுறை, கொரானா பாதிப்பு எதிரொலியால், சீனாவில், கார் விற்பனை, 92 விழுக்காடு சரிந்துள்ளது. 2 மாதங்களில், 6 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் அளவிற்கான பொருளாதார இழப்பை, சீனா எதிர்கொண்டுள்ளது.
இங்கிலாந்தைத் தொடர்ந்து, சீனர்கள் உள்ளிட்ட ஆசியர்களை குறிவைத்து நடத்தப்படும் இனவெறித் தாக்குதல், அமெரிக்காவிலும் பரவத் தொடங்கியிருப்பதாக, சிஎன்என் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஜப்பானில், “தி டைமண்ட் பிரின்சஸ்” சொகுசு கப்பலில், கொரானாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 639ஆக அதிகரித்துள்ளது. கொரானா பாதிப்பில்லாத 400 பேர், கப்பலில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். கப்பலில் உள்ள 138 இந்தியர்களில், 8 பேர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 8 பேரும் நல்ல முறையில், உடல்நலம் தேறிவருவதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது.