கொரோனா வைரஸ் பரவலால் சீனாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி!
14 Feb,2020
கொரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக சீனாவின் பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளன.
இதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் தேவை வரும் 3 மாதங்களில் வெகுவாகக் குறையும் என சர்வதேச எரிசக்தி முகாமை தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக கச்சா எண்ணெயின் தேவை குறைந்து வருவதாகவும் முகாமை குறிப்பிட்டுள்ளது.
இவ்வாண்டில் கச்சா எண்ணெயின் தேவை தினசரி 3 இலட்சத்து 65 ஆயிரம் பெரல்களாகக் குறையும் என்று தெரிவித்துள்ள சர்வதேச எரிசக்தி முகாமை, கடந்த மாதம் கணிக்கப்பட்டதில் இருந்து இது 30 சதவிகிதம் குறைவு என்றும் கூறியுள்ளது.
இதனிடையே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. Brent கச்சா எண்ணெயின் விலை 1.3 வீதம் குறைந்து, பெரலுக்கு 55.08 டொலராக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கத்தால் சர்வதேச கச்சா எண்ணெயின் தேவை தினசரி 2 இலட்சத்து 30 ஆயிரம் பெரல்களாகக் குறையும் என எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான OPEC ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.