தன் நாட்டு மக்களை திரும்பப்பெற மறுத்துவிட்டதால் பாகிஸ்தானை அமெரிக்கா தடைப்பட்டியலில் சேர்த்து உள்ளது. இதனால் இனி பாகிஸ்தானியர்களுக்கு அமெரிக்க விசா கிடைக்காது.
அமெரிக்காவில் உலக நாடுகளை சேர்ந்தவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி விசா பெற்று செல்கிறார்கள். ஆனால் விசா காலம் முடிந்தும் அவர்களில் பலரும் தாய்நாடு திரும்புவதில்லை. அவர்கள் அமெரிக்காவிலேயே தங்கி விடுகின்றனர்.
இது அமெரிக்காவுக்கு பெரும் சுமையாக அமைகிறது.
அப்படி காலம் கடந்து அமெரிக்காவில் தங்கியுள்ள பிற நாட்டினர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு நாடு கடத்துவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுப்பது வாடிக்கை.
இந்தியர்கள்கூட கடந்த காலத்தில் இப்படி விசா காலம் முடிந்தும் அமெரிக்காவில் தங்கி இருந்த நிலையில் அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்தியாவில் இருந்து விமானங்கள் போய் அவர்களை மீட்டுக்கொண்டு வந்துள்ளன.
பாகிஸ்தானியர்கள்
இப்படி ஏராளமான பாகிஸ்தானியர்கள் அமெரிக்காவில் விசா காலம் முடிந்து இன்னும் அங்கு தங்கி உள்ளனர். அவர்களை நாடு கடத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது.
ஆனால் பாகிஸ்தான், தன் நாட்டு மக்களை அமெரிக்காவிடம் இருந்து திரும்ப பெற்றுக்கொள்வதற்கு மறுத்து விட்டது. இது அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
தடைப்பட்டியலில் சேர்த்தது
இப்படி ஏற்கனவே கயானா, காம்பியா, கம்போடியா, எரித்ரியா, கினியா, சியரா லியோனே, மியான்மர், லாவோஸ் ஆகிய 8 நாடுகள் செய்தபோது, அந்த நாடுகளை அமெரிக்கா தடை பட்டியலில் சேர்த்தது.
இப்போது இந்த நாடுகளுடன் சேர்த்து பாகிஸ்தானையும், கானாவையும் தடைப்பட்டியலில் அமெரிக்கா சேர்த்து உள்ளது. இதற்கான நடவடிக்கை கடந்த 22-ந்தேதி எடுக்கப்பட்டு இருக்கிறது.
விசா கிடைக்காது
இனி பாகிஸ்தானியர்கள் அமெரிக்க விசாவைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பாகிஸ்தானுடனான தூதரக உறவில் மாற்றம் ஏதும் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் குடிவரவு மற்றும் தேசிய சட்டம் பிரிவு 243(டி) படி, தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு வெளியுறவு மந்திரி குடிவரவு மற்றும் குடியேற்ற விசாக்கள் வழங்குவதை நிறுத்தி விடுவார். எனவே பாகிஸ்தானியர்கள் அமெரிக்க விசா பெற முடியாத அவலம் ஏற்படும்.
இதுதொடர்பாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் உசேன் ஹக்கானி கருத்து தெரிவிக்கையில், “பாகிஸ்தானை அமெரிக்கா தடை பட்டியலில் சேர்த்துள்ளதால் பாகிஸ்தானியர்களுக்கு சிக்கல். நிலைமை கடினமாகி விடும்” என குறிப்பிட்டார்