லத்தீன் அமெரிக்காவுக்கு அருகில் உள்ள கடல் பகுதிக்கு அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் வந்தடைந்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவுக்கு இடையிலான அதிகரிக்கும் பதற்றத்தில் ஒரு திருப்புமுனையாகும்.
1989 பனாமா மீதான படையெடுப்புக்கு பிறகு, இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் பெரிய அளவிலான நடவடிக்கையை இது குறிக்கிறது.
மூன்று தசாப்தங்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை மானுவல் நோரிகா எதிர்கொண்டதைப் போல இப்போது வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். அந்த குற்றச்சாட்டுகளை அவர் உறுதியாக மறுக்கிறார்.
வெனிசுவேலாவின் கரையோரங்களுக்கு அருகில் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் அதிநவீன விமானந்தாங்கி கப்பலை நிலைநிறுத்தினாலும், அமெரிக்கா அதன் நோக்கங்களை தெளிவாக வெளிப்படுத்தவில்லை.
கடந்த வாரம், பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பாட்ரினோ லோபஸ், மதுரோவின் அரசாங்கத்துக்கான (வெனிசுவேலா அதிபர்) அச்சுறுத்தலை எதிர்கொள்ள, நாடு முழுவதும் பொதுமக்கள் படைகளுடன் சேர்ந்து நிலம், கடல், வான்வழி, நதி மற்றும் ஏவுகணை படைகளை "பெரியளவில் நிலைநிறுத்த" இருப்பதாக அறிவித்தார்.
ஒரு தொலைக்காட்சி உரையில், இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட 200,000 துருப்புக்களை அணி திரட்ட மதுரோ உத்தரவிட்டுள்ளார் என்று பாட்ரினோ லோபஸ் கூறினார்.
அமெரிக்க விமானந்தாங்கி கப்பலின் வருகை என்பது, வெனிசுவேலாவில் செயல்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டும் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான அவரது ராணுவ நடவடிக்கையின் தீவிரப்படுத்தலாகப் பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, படகு மற்றும் கப்பல்களில் பயணித்த 80க்கும் அதிகமான உயிர்களை ஏற்கனவே பறித்துள்ளது.
ஆனால் சில ஆய்வாளர்கள் இந்த நடவடிக்கை மதுரோவை பலவீனப்படுத்துவதற்கான அல்லது கவிழ்ப்பதற்கான பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற வெனிசுவேலா அதிபர் தேர்தல் ஒரு மோசடி என எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச பார்வையாளர்களால் முத்திரை குத்தப்பட்டது. அமெரிக்கா மதுரோவின் அரசாங்கம் சட்டவிரோதமானது என்று கருதுகிறது.
செப்டம்பரில், மதுரோ வெனிசுவேலாவைப் பாதுகாக்க 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தயாராக இருப்பதாகக் கூறினார். அத்தகைய எண்ணிக்கையிலான ஒரு படைக்கு ஆயுதம் வழங்கும் வாய்ப்பும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
.
"அது உண்மை இல்லை. உண்மையான எண்ணிக்கை மிகக் குறைவு. மதுரோ கடந்த ஆண்டு 40 லட்சம் வாக்குகளை கூட பெற முடியவில்லை," என்று 2020 முதல் 2023 வரை கொலம்பியாவில் அமெரிக்க மூத்த தூதரக அதிகாரியாக இருந்த ஜேம்ஸ் ஸ்டோரி பிபிசியிடம் கூறினார்.
.
உத்தி ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் (ஐஐஎஸ்எஸ்) ஓர் அறிக்கை, வெனிசுவேலாவில் 123,000 துருப்புக்கள், அத்துடன் 220,000 பொதுமக்கள் படை மற்றும் 8,000 ரிசர்வ் படையினர் இருப்பதாக மதிப்பிடுகிறது.
வெனிசுவேலா வீரர்கள் அரிதாகவே பயிற்சி பெறுகிறார்கள், மேலும் சாவிஸ்டா படையில் உள்ள பல உறுப்பினர்களிடம் ஆயுதம் இல்லை என்று ஜேம்ஸ் ஸ்டோரி கூறினார்.
"ஒருவேளை ராணுவத்தில் ஒரு சில திறமையான பிரிவுகள் இருக்கலாம், ஆனால் ஒரு போரிடும் சக்தியாக, அவை குறிப்பாக திறமையானவை அல்ல."
வெனிசுவேலாவின் ராணுவம் முன்பு இருந்ததைப்போல் இல்லை என்று கூறும் அவர், ஆனால் பிராந்தியத்தில் சில தனித்துவமான வளங்கள் இன்னும் அதற்கு உள்ளன எனத் தெரிவித்தார்.
2006-இல் முன்னாள் அதிபர் ஹ்யூகோ சாவேஸ் ரஷ்யாவிடமிருந்து வாங்கிய சுமார் 20 சுகோய் போர் விமானங்களைத் தவிர, வெனிசுவேலா 1980-களில் அமெரிக்காவின் முக்கிய பிராந்திய கூட்டாளியாக இருந்தபோது, ஒரு டஜனுக்கும் அதிகமான அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-16 விமானங்களையும் வாங்கியது.
"சுகோய் தாக்குதல் ஜெட் விமானங்கள் பிராந்தியத்தில் உள்ள வேறு எதையும் விட உயர்ந்தவை, சில இன்னும் செயல்படுகின்றன. F-16 களைப் பொறுத்தவரை, ஒன்று அல்லது இரண்டு இன்னும் வேலை செய்கின்றன என்று நான் நினைக்கிறேன்," என்று ஜேம்ஸ் ஸ்டோரி குறிப்பிட்டார்.
விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள்
அக்டோபர் பிற்பகுதியில், அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், வெனிசுவேலா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 5,000 இக்லா-எஸ் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை "முக்கிய வான் பாதுகாப்பு நிலைகளில்" நிலைநிறுத்தியுள்ளதாக மதுரோ அறிவித்தார்.
"உலகில் உள்ள எந்த ராணுவ சக்தியும் இக்லா-எஸ் இன் சக்தியை அறிந்திருக்கும்," என்று மதுரோ ஒரு தொலைக்காட்சி ராணுவ நிகழ்வின் போது கூறினார்.
இக்லா-எஸ் (Igla -S) என்பது குறுகிய தூர, குறைந்த உயரத்தில் செயல்படும் வான் பாதுகாப்பு அமைப்பாகும், இது க்ரூஸ் ஏவுகணைகள், டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது.
வெனிசுவேலா சீனாவால் தயாரிக்கப்பட்ட VN-4 கவச வாகனங்களையும் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட ஆயுதமேந்திய டிரோன்களைக் கொண்ட ஒரே தென் அமெரிக்க நாடாக வெனிசுவேலா உள்ளது. இதை மதுரோ 2022-இல் ஒரு ராணுவ அணிவகுப்பின் போது காட்சிப்படுத்தினார்.
வெனிசுவேலா இரானிடமிருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவும் வசதி கொண்ட பேகாப்-III எனும் வேகமான தாக்குதல் படகுகளையும் பெற்றுள்ளது.
அன்டோனியோ ஜோஸ் டி சுக்ரே 100 மற்றும் 200 (ANSU-100 மற்றும் ANSU-200) ஆகியவை இரானிய மாடல்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட வெனிசுவேலாவில் தயாரிக்கப்பட்ட டிரோன்கள் ஆகும்.
கூடுதலாக, ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸி ஜுராவ்லெவின் கூற்றுப்படி, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பான்ட்சிர்-எஸ் 1 மற்றும் புக்-எம் 2 இ ஏவுகணை அமைப்புகள் சமீபத்தில் ஐஎல் -76 போக்குவரத்து விமானங்களில் வெனிசுவேலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
'எளிதாக' வீழ்த்தக்கூடிய ஓர் அமைப்பு
ஆனால் "வெனிசுவேலா இருப்பதாகக் கூறுவதற்கும் உண்மையில் செயல்படுவதற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது" என்று 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மையங்களின் நெட்வொர்க்கான பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சிக்கான பிராந்திய ஒருங்கிணைப்பாளர் அமைப்பில் (CRIES) வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ஆய்வாளர் ஆண்ட்ரே செர்பின் பாண்ட் கூறுகிறார்.
வெனிசுவேலாவுக்குள் நேரடி தாக்குதல்கள் மேலும் தீவிரமடையக்கூடும் என்று வரும் அறிக்கைகளுக்கு மத்தியில், நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பெச்சோரா எனும் தரையிலிருந்து வானில் ஏவப்படும் ஏவுகணை அமைப்புகள் போன்றவை, இப்போது பயன்பாட்டில் இல்லாத 1960-களுக்கு முந்தைய வடிவமைப்பை கொண்டவை. அவை அமெரிக்க தொழில்நுட்பத்தால் "எளிதாக வீழ்த்தப்படலாம்" என்று செர்பின் பாண்ட் கூறினார்.
மதுரோவும் அவரது நெருக்கமான வட்டமும் ஒரு கொரில்லா போரை நடத்த தயாராகி வருவதாக பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
செப்டம்பரில், வெனிசுவேலாவின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ நாடு ஒரு "நீடித்த போருக்கு" தயாராக இருப்பதாக எச்சரித்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, மதுரோவின் அரசாங்கம் பொலிவேரியன் தேசிய ஆயுதப் படையிடம், ஏழை சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சி அளிக்க உத்தரவிட்டது.
வெனிசுவேலா மக்கள் மதுரோவின் பின்னால் அணிதிரள்வார்கள் என்ற கருத்தை ஜேம்ஸ் ஸ்டோரி நிராகரிக்கிறார்.
"மதுரோ ராணுவத்தாலோ அல்லது மக்களாலோ நன்கு விரும்பப்படவில்லை, அதனால்தான் மக்கள் அவரைப் பின்தொடர்வார்கள் அல்லது ஒரு கொரில்லா போரில் அவரை ஆதரிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார்.
''வெனிசுவேலா ராணுவம் அமெரிக்காவுடன் ஓர் உண்மையான மோதலுக்கு தயாராக இல்லை,'' என்று கூறுகிறார்.
"ஒரு அண்டை நாடான கொலம்பியா அல்லது பிரேசில் உடனான மோதலில் வெனிசுவேலாவின் வழக்கமான ஆயுத அமைப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்று அவர் விளக்கினார், ''ஆனால் அவை அமெரிக்காவிற்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தாது'' என்றும் தெரிவித்தார்.