ஈரான் மலைக்கு நடுவே பூமிக்கடியில் மிகவும் பாதுகாப்பாக அமைத்து இருந்த ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தை அமெரிக்கா தனது பி2 பாம்பர்ஸ் போர் விமானத்தினத்தின் மூலமாக ‛பங்கர் பஸ்டர்' குண்டுகளை போட்டு அழித்தது. இதன்மூலம் ஈரானின் அணுஆயுதம் தயாரிப்பு திட்டம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் தான் ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தை அழிக்க பயன்படுத்தப்பட்ட பி2 பாம்பர்ஸ் விமானத்தை உருவாக்கியதில் இந்திய வம்சாவளி இன்ஜினியரான நோஷி கோவாடியா மிக முக்கிய பங்கு வகித்ததும், தற்போது அவர் 32 ஆண்டு சிறை தண்டனையில் ஜெயிலில் இருப்பதும் பலருக்கும் தெரியாது.
இந்த நோஷி கோவாடியா யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த மாதம் கடும் போர் ஏற்பட்டது. மொத்தம் 12 நாட்கள் போர் நடந்தது. கடந்த மாதம் 22ம் தேதி இந்த போரில் தான் திடீரென்று அமெரிக்கா என்ட்ரி கொடுத்தது. அன்றைய தினம் அதிகாலையில் திடீரென்று அமெரிக்க போர் விமானங்கள் ஈரானில் உள்ள நடான்ஸ், ஃபோர்டோ, இஸ்பஹான் உள்ளிட்ட அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகளை வீசி தாக்கியது.
இந்த 3 இடங்களில் தான் ஈரான் தனது அணுஆயுதம் தயாரிப்புக்கான யுரேனியத்தை செறிவூட்டும் பணியை மேற்கொண்டு வந்த நிலையில் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மிகவும் முக்கியமான அணுசக்தி நிலையம் தான் ஃபோர்டோ.இது மலைக்கு நடுவே பூமிக்கடியில் பாதாள அறைகளாக அமைந்துள்ளது. இதனை இஸ்ரேலால் அழிக்க முடியாது. இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி அந்த அணுசக்தி நிலையத்தை அழித்தது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை இஸ்ரேல், அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வந்த நிலையில் இந்த தாக்குல் நடத்தப்பட்டது. ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தின் மீது அமெரிக்கா மொத்தம் 14 ‛பங்கர் பஸ்டர்' குண்டுகளை பி2 ஸ்பிரிட் பாம்பர்ஸ் விமானத்தை பயன்படுத்தி வீசியது.
இந்த ‛பங்கர் பஸ்டர்' 200 அடி ஆழம் வரை துளைத்து சென்று வெடிக்கும் என்பதால் ஈரானுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். அதன்பிறகு போர் தொடங்கிய 12வது நாளில் அமெரிக்கா தலையீட்டால் இஸ்ரேல் - ஈரான் நாடுகள் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டன. தற்போது அமைதி நிலவி வருகிறது. இப்படி அண்மையில் உலகம் முழுவதும் கவனம் பெற்ற பி2 பாம்பர்ஸ் ஸ்பிரிட் விமானத்தை நவீன டெக்னாலஜியுன் உருவாக்க இந்திய வம்சாவளி இன்ஜினியர் தான் காரணம் என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் இப்போது அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது பெயர் தான் நோஷி கோவாடியா. அமெரிக்காவின் பி2 பாம்பர்ஸ் ரக விமானங்களை நார்த்ரோப் க்ரம்மன் என்ற நிறுவனம் (Northro Grumman) தான் தயாரித்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் பணியாற்றியவர் தான் இந்திய வம்சவாளி தான் நோஷி கோவாடியா. இவர் மும்பபையில் 1944ல் பார்சி குடும்பத்தை சேர்ந்தவர். 15 வயதில் பிஎச்டி பட்டம் பெறும் அளவுக்கு மிகவும் திறமையாக இருந்தார். அறிவியல் குறித்த பாடத்தில் கெட்டிக்காரராக இருந்தார். தனது 19வது வயதில் 1963ல் ஏரோநாட்டிக்கல் படிக்க அமெரிக்கா சென்றார். படிக்க அமெரிக்கா சென்றவருக்கு அந்த நாடு பிடித்து போனது. இதையடுத்து அமெரிக்காவின் குடியுரிமையை பெற்றார். மிகவும் அறிவார்ந்த மாணவராக அவர் வலம் வந்தார். பட்டம் பெற்ற ஒரே ஆண்டில் நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனத்தில் டிசைன் இன்ஜினியரானார்.
வெர்ஜினியாவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் தான் அமெரிக்க ராணுவத்துக்கு ராணுவம், பிற தளவாடங்களை வழங்கி வருகிறது. 1989ம் ஆண்டில் பி2 ரக போர் விமானங்களை தயாரிக்க இந்த நிறுவனம் தொடங்கியது. அந்த திட்டத்தில் நோஷி கோவாடியா டிசைன் இன்ஜினியராக இருந்தார். பி2 குண்டு வீச்சு விமானத்தில் தனித்துவமான உந்து விசை அமைப்பை உருவாக்குவதில் நோஷி கோவாடியா முக்கிய பங்கு வகித்தார். இது விமானத்தின் அகச்சிவப்பு வெப்பத்தை குறைக்கும் வகையில் உள்ளது. ரோடார்களில் கண்களுக்கு சிக்காமல் இருப்பதில் இந்த உந்து விசை அமைப்பு தான் மிகவும் முக்கியமாகும். ரேடார்களில் சிறிய பறவை போல் பி2 பாம்பர்ஸ் விமானத்தை இது காண்பிக்கும்.
இதனால் எளிதாக ரேடாரை தாண்டி அந்த விமானத்தால் எதிரி நாடுகளின் எல்லையில்ஊடுருவி தாக்குதல் நடத்த முடியும். இதனால் நோஷி கோவாடியா பெரும் பெயர் பெற்றார். அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. புகழ் உச்சத்துக்கு போனது. ஆனால் இந்த பெயரும், சிறிது காலம் மட்டுமே நீடித்தது. இதற்கு காரணம் அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தான். நோஷி கோவாடியா கோவாடியா அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை சீனாவிற்கு விற்றதாக புகார் முன்வைக்கப்பட்டது. சில வகைப்படுத்தப்பட்ட ராணுவ ஆவணங்கள் அவரது வீட்டில் இருந்து எப்பிஐ எனும் அமெரிக்காவின் உளவு அமைப்பு கடந்த 2005ல் கண்டுபிடித்தது. வங்கி பரிவர்த்தனை, திட்ட சான்று உள்ளிட்டவையும் கிடைத்தது. அதுமட்டுமின்றி 2003 முதல் 2005 ல் மாற்று பெயர்,
போலி அடையாளத்தில் சீனாவில் 6 முறை சென்று வந்ததாக கூறப்படுகிறது. சீன அதிகாரிகளுக்கு பாதுகாப்பு தரவுகள் மற்றும் சீனாவிற்கு வடிவமைப்பு தரவுகளை வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நோஷி கோவாடியா அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டம், உளவு சட்டம் உள்ளிட்டவற்றில் கைது செய்யப்பட்டார். சீனா, ஜெர்மனி, இஸ்ரேல் மற்றம் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு உளவு மற்றும் ராணுவ தகவல்களை அவர் விற்றதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. முதலில் இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் அவர் மறுத்தார் அதன்பிறகு ஏற்றுக்கொண்டார். சீனாவிடம் இருந்து பணம் பெற்று கொண்டு உளவு தகவல்களை விற்றதை ஒப்புக்கொண்டார். ஹவாயின் மயி என்ற பகுதியில் 1999ல் ஆடம்பர பங்களாவை வங்கி கடன் மூலம் தான் வாங்கியதாகவும், ரூ.30 கோடி மதிப்பிலான அந்த பங்களாவின் மாத தவணை செலுத்த தன்னிடம் பணம் இல்லாததால் வேறு வழியின்றி சீனாவிடம் ஸ்டெல்த் உள்பட பிற தொழில்நுட்பங்கள், ராணுவ ரகசியங்களை விற்றதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2010ல் நோஷி கோவாடியா மீது 14 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது கொலராடோவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2032 பிப்ரவரி 1ம் தேதி வரை அவர் சிறையில் தான் இருக்க வேண்டும். அதன்பிறகு அவர் விடுதலையாவார் என்பது குறிப்பிடத்தக்கது.