போர் நிறுத்த ஒப்பந்தம் மேலும் 3 இஸ்ரேலியர்கள் விடுவிப்பு. பதிலுக்கு 183 பாலஸ்தீனர்கள் விடுதலை
09 Feb,2025
டெய்ர் அல்-பலாஹ்: ஹமாஸ் – இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தப்படி மேலும் 3 இஸ்ரேல் பணய கைதிகளை ஹமாஸ் நேற்று விடுதலை செய்தது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் படையினர் கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உள்பட 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலை சேர்ந்த ஏராளமானோரை பணய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்றனர்.
இதற்கு பதிலடியாக அக்டோபர் 8ம் தேதி முதல் ஹமாஸ் படையினரை குறி வைத்து இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் அப்பாவி பாலஸ்தீனர்கள் 46,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கடந்த ஜனவரி 16ம் தேதி உடன்பாடு எட்டப்பட்டது.
இதையடுத்து இஸ்ரேலில் இருந்து பிடித்து செல்லப்பட்ட பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒத்து கொண்டது. அதேபோல் காசா மீதான போரை நிறுத்த இஸ்ரேலும் ஒப்பு கொண்டது. 3 கட்டங்களாக இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக ஹமாஸ் பிடித்து சென்ற 100 பணய கைதிகளில் 33 பணய கைதிகளை 6 வாரங்களில்(42 நாள்களில்) விடுவிக்க ஹமாசும், இந்த 33 பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள 1,904 பேரை விடுவிக்க இஸ்ரேலும் ஒத்து கொண்டன.
அதன்படி ஏற்கனவே 13 இஸ்ரேல் பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்திருந்தது. அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் இருந்த 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்திருந்தது. இந்நிலையில் ஹமாஸ் பிடியில் இருந்த எலி ஷராமி(52), ஆர் லெவி(34) மற்றும் ஓஹாட் பென் அமி(56) ஆகிய மேலும் 3 இஸ்ரேல் பணய கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டனர். இதற்கு இணையாக இஸ்ரேல் சிறையில் இருந்து 183 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது. ஹமாஸ் – இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடங்கியது முதல் நேற்று வரை மொத்தம் 21 இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.