அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள நிலையில் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த டிரம்புக்கு 10ம் தேதி தண்டனை
05 Jan,2025
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள நிலையில் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த டிரம்புக்கு 10ம் தேதி தண்டனை: நியூயார்க் நீதிமன்ற அறிவிப்பால் அரசியல் பரபரப்பு
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப், வருகிற 20ம் தேதி நாட்டின் அதிபராக பதவியேற்க உள்ளார். இந்தநிலையில்அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த காலகட்டத்தில், கடந்த 2016 தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் அவர் குற்றவாளி என 12 ஜூரிகள் அடங்கிய குழு அறிவித்தது. அதாவது தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸுக்கு சுமார் 1.3 லட்சம் டாலர்களை 2016ம் ஆண்டுக்கான தேர்தல் பிரசார நிதியில் இருந்து கொடுத்ததாக சொல்லப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணைகள் முடிவுற்ற நிலையில் நியூயார்க் நீதிமன்ற நீதிபதி ஜுவான் மெர்ச்சென் பிறப்பித்த உத்தரவில், ‘டிரம்பிற்கு எதிரான வழக்கில் வரும் 10ம் தேதி தீர்ப்பு மற்றும் தண்டனை விபரங்கள் வெளியிடப்படும்’ என்று அறிவித்துள்ளார். நீதிபதியின் இந்த உத்தரவு, அமெரிக்கா அதிபராக பதவியேற்கவிருக்கும் டிரம்புக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அவரது கட்சியான குடியரசு கட்சியும் அதிர்ச்சியடைந்துள்ளது. எவ்வாறாயினும், டிரம்ப் சிறைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்கின்றனர். அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படியாகிலும் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால், தண்டனை பெற்ற ஒருவர் அதிபராக பதவியேற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.