மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படை, சமீபத்திய தீவிர தாக்குதல் மற்றும் அரசுப் பிடியில் இருந்த நகரங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக அவருடைய சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவுரை எழுதியது. அதிபர் பஷார் அசாத் ஆட்சி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த பல லட்சம் அகதிகள் மீண்டும் சிரியாவுக்கு திரும்பி வருவதுடன், அதைக் கொண்டாடியும் வருகின்றனர்.
மேலும், சிரியாவின் புதிய அரசின் பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம் திகதி வரை இடைக்கால அரசு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தப்பிச் சென்ற பஷார் அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். அவருக்கு ரஷ்யா அரசாங்கம் அடைக்கலம் தந்துள்ளது. இந்த நிலையில், தப்பிச் சென்ற அசாத் முதல்முறையாக சிரியா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில்,
“என்னைப் பொறுத்தவரை கிளர்ச்சியாளர்களை எதிர்த்துச் சண்டையிடத்தான் விரும்பினேன். நான் சிரியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று விரும்பவில்லை. அதேபோல், என் பதவியை ராஜினாமா செய்து, இன்னொரு நாட்டிடம் தஞ்சமடைய கோர வேண்டும் என்று நான் விரும்பவில்லை. நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை எதிர்த்துச் சண்டையிட வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது.
நாடு தற்போது பயங்கராவதிகளின் கைகளில் சிக்கி உள்ளது. தனிப்பட்ட ஆதாயத்துக்காக நான் ஒருபோதும் பதவியை விரும்பவில்லை. சிரியா மக்களின் நம்பிக்கையுடன் அவர்களால் ஆதரிக்கப்படும் பாதுகாவலராக நான் இருப்பதாகக் கருதுகிறேன். சிரியா மீண்டும் சுதந்திரமாகச் செயல்படும்” என அதில் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது. அபாயகரமான ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களின் கையில் போவதை தடுக்கும் வகையில் சிரியா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. அதாவது, சிரியாவைக் கைப்பற்றியிருக்கும் கிளர்ச்சிப் படையினருக்கு அந்த ஆயுத தளவாடங்கள் கிடைத்து, அதன் மூலம் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை முன்கூட்டியே தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக இஸ்ரேல் கூறிவருகிறது.
குறிப்பாக, சிரியாவிலுள்ள ஏவுகணைக் கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. மிகவும் சக்திவாய்ந்த அந்தத் தாக்குதலின் அதிா்வுகள் அருகிலுள்ள நிலநடுக்க ரிக்டா் அளவுகோல்களில் பதிவாகின. இஸ்ரேல் நிலநடுக்கவியல் ஆய்வு மையத்தில் 3.1 அலகுகளாக இது பதிவாகியுள்ளது. இந்தத் தாக்குதல், கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு சிரியாவில் நடத்தப்பட்டுள்ள மிக சக்திவாய்ந்த தாக்குதலாகும் என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, நாட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை இனியும் நியாயப்படுத்த முடியாது என்று கிளா்ச்சிப் படையின் தலைவா் தெரிவித்துள்ளார்.
‘சிரியா புதைகுழியில் குறைந்தது 100,000 உடல்கள்’
வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் முன்னாள் அரசாங்கத்தால் கொல்லப்பட்ட குறைந்தது 100,000 பேரின் உடல்கள் டமாஸ்கஸ் தலைநகரின் புறவெளியில் அமைந்துள்ள புதைகுழி ஒன்றில் குவியலாக கிடப்பதாக சிரியா அவசரகால பணிக்குழுத் தலைவர் மவாஸ் முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் நேற்று டிசம்பர் 16ஆம் திகதி தொலைபேசிவழி பேசிய அவர், தாம் கடந்த பல ஆண்டுகளில் கண்டுபிடித்துள்ள இத்தகைய ஐந்து மனிதக் குவியல் புதைகுழிகளில் சிரியா தலைநகருக்கு 40 கிலோமீட்டர் வடக்கே உள்ள அல் குட்டேஃபா பகுதியும் ஒன்று என்றார்.
“இந்த ஐந்து இடங்களைத் தவிர வேறு பல மனிதக் குவியல் புதைகுழிகளும் நிச்சயம் இருக்கும். அவற்றில் சிரியா நாட்டு மக்களைத் தவிர அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்களும் இன்னும் வேறு பல வெளிநாட்டவரும் இருப்பார்கள்,” என்றார் முஸ்தஃபா.
முஸ்தஃபாவின் குற்றச்சாட்டுகளை ராய்ட்டர்ஸ் நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
தமது ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக திரு அசாத் பேரளவில் சிவில் போர் தொடுத்து வந்ததில் 2011ஆம் ஆண்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான சிரியர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.
மனித உரிமை மீறல்களைத் தமது அரசாங்கம் செய்யவில்லை என்று திரு அசாத் தொடர்ந்து மறுத்து வந்ததுடன் தமது எதிராளிகளைத் தீவிரவாதிகள் என்றும் குறிப்பிட்டார்.
அசாத் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றதை அடுத்து முஸ்தஃபா சிரியாவைச் சென்றடைந்தார்.
சித்ரவதைக்கு ஆளாகி உயிரிழந்தோரின் உடல்கள் இராணுவ மருத்துவமனைகளிலிருந்து வெவ்வேறு உளவுத்துறை பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு பின்னர் மனிதக் குவியல் புதைகுழி ஒன்றுக்கு மாற்றப்படும் என்றும் இதற்கு சிரியா ஆகாயப் படையின் உளவுத்துறைப் பிரிவு பொறுப்பாக இருந்தது என்றும் முஸ்தஃபா பேட்டியின்போது கூறினார்.
பாதுகாப்பற்ற இந்தப் புதைகுழி இடங்கள் பாதுகாக்கப்படுவது முக்கியம் என்று கவலை தெரிவித்த திரு முஸ்தஃபா, விசாரணைக்கு ஆதாரங்களைக் காக்க வேண்டும் என்றார்.