இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துங்கள்: ஈரான் மதத் தலைவர் உத்தரவு
                  
                     02 Nov,2024
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார்.
	 
	கடந்த அக்டோபர் 1-ம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 200 ஏவுகணைகளை வீசியது. இதற்கு பதிலடியாக கடந்த 26-ம் தேதி இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் ஈரானின் 20 ராணுவ தளங்கள் மீது குண்டுகளை வீசின. அன்றைய தினம் ஈரானின் ஆயுத கிடங்குகள், ஆயுத உற்பத்தி ஆலைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
	 
	ஈரான் நாட்டின் அதிபராக மசூத் பெசேஷ்கியன் பதவி வகிக்கிறார். எனினும் அந்த நாட்டு மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, பிரதமரைவிட உயர்ந்தவராக கருதப்படுகிறார். வெளியுறவு கொள்கை தொடர்பான முக்கிய முடிவுகளை அவரே எடுக்கிறார்.
	 
	 
	இந்த சூழலில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் ராணுவத்துக்கு கமேனி உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்பாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மீது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஈரான் ராணுவத்துக்கு பதிலாக அதன் பினாமிகளான ஹிஸ்புல்லா, ஹமாஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் மூலம் தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
	 
	இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, “இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஈரானுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளோம். இதை மீறி ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்ய வேண்டாம் என்று ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கிறோம்" என்று தெரிவித்தார்.
	 
	இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: ஈரானின் எத்தகைய தாக்குதலையும் முறியடிக்கும் வலிமை எங்களுக்கு உள்ளது. அண்மையில் அமெரிக்காவின் தாட் ஏவுகணை தடுப்பு சாதனம் இஸ்ரேலில் நிறுவப்பட்டு உள்ளது. அதோடு எங்களது வான் வழி தடுப்புகள் மூலம் எதிரிகளின் ஏவுகணைகளை நடுவானில் தடுத்து அழிப்போம். ஈரான் போர் விமானங்கள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்தால் சுட்டு வீழ்த்துவோம்.
	 
	லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், காசாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் தலைதூக்க முடியாத அளவுக்கு லெபனான், காசா பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. சிரியாவை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் மற்றும் ஏமனின் ஹவுதி தீவிரவாதிகளுக்கு அமெரிக்க போர் விமானங்கள் தகுந்த பாடம் கற்பித்து உள்ளன. இதன்பிறகும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த துணிந்தால் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். இவ்வாறு இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.