ஹிஸ்புல்லாவை வெளியேற்றாவிட்டால், காசாவின் பேரழிவு விளைவுகள் லெபனானிலும்ஏற்படும்
09 Oct,2024
ஹிஸ்புல்லாவை வெளியேற்றாவிட்டால், காசாவின் பேரழிவு விளைவுகள் லெபனானிலும் ஏற்படும் என்று லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஓராண்டுக்கு மேல் நீடிக்கும் இஸ்ரேல், காசா போரில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோயுள்ளன. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக அருகேயுள்ள லெபனான் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர்களை ஒரே நேரத்தில் வெடிக்க வைத்து அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பை அடியோடு ஒழிக்கும் நோக்கத்தில், கடந்த மாத இறுதியில் லெபனான் மீது வான்வழி தாக்குதலை நடத்தியது.
தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதையடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பின் அடுத்தக்கட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய தளபதிகள் இருக்கும் இடங்களை கண்டறிந்து அங்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
லெபனானில் சுமார் இரண்டாயிரம் மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், தாக்குதல் மேலும் தீவிரமடையும் என்ற அச்சத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, லெபனான் மக்களுக்கு ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், ஹிஸ்புல்லாவை விடுவிக்கத் தவறினால், காசாவின் பேரழிவு விளைவுகள் லெபனானில் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசுகளாக வரவிருந்தவர்களை இஸ்ரேலியப் படைகள் கொன்றுவிட்டதாக அறிவித்த அவர், பல ஆண்டுகளாக இருந்ததை விட இன்று, ஹிஸ்புல்லா பலவீனமாக இருப்பதாக கூறினார். மேலும், ஹிஸ்புல்லாவை வெளியேற்றுவததன் மூலம் இந்தப் போர் முடிவுக்கு வரும் என்றும் லெபனான் மக்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்யாத பட்சத்தில் காசாவில் நாம் பார்ப்பது போல் லெபனானில் அழிவுக்கும் துன்பத்திற்கும் வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார். ஹிஸ்புல்லா தொடர்ந்து போராடத் தயாராக இருப்பதால், லெபனானில் நிலைமை பதற்றமாகவே உள்ளது