ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்க மாட்டோம்
                  
                     03 Oct,2024
                  
                  
                     
					  
                     
						
	ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்க மாட்டோம் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
	 
	லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் வீசி தாக்குதலை தொடர்ந்தது. இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என உலகத் தலைவர்கள் பலர் எச்சரித்தனர். இதற்கு ஈரான் நிச்சயம் பதிலளிக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் நேற்று லெபனானில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது.
	 
	இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், மேற்கத்திய நாடுகளை ஒருங்கிணைத்து ஈரானுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுக்க தீவிர ஆலோசனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
	 
	இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஆகியோர் ஈரானுக்கு எதிரான எவ்வித தாக்குதலிலும் தாங்கள் இணையப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடமும் இரு நாடுகளும் கேட்டுக் கொண்டுள்ளது.
	 
	இஸ்ரேல் நாட்டின் மக்கள் மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்ததுடன், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமினிடமும் தொலைப்பேசியில் அழைத்து நிலைமையை கேட்டறிந்தார். மேலும், போர்ப் பதற்றம் குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடனும் தொலைப்பேசியில் ஸ்டார்மர் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.