கடும் போருக்கு நடுவில் இஸ்ரேல் மனிதாபிமானம்!
13 May,2024
காசாவில் ரபா நகரை குறி வைத்து மிகக் கடுமையான தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், அந்நகரில் பாதிக்கப்பட்டு வெளியேறும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வதற்காக அங்கு மருத்துவமனை ஒன்றை திறந்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த 7 மாதங்களுக்கு முன் தொடங்கிய போர் இதுவரையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் காசா தரப்பில் இதுவரை சுமார் 34,900 பேர் பலியாகி உள்ளனர். அங்குள்ள அனைத்து நகரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் தரப்புக்கும் சேதம் அதிகம் தான்.
இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்து பல்வேறு நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் சமீபத்தில் இஸ்ரேல் மீது காசா நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து அமெரிக்காவின் பேச்சுவார்த்தை அழைப்பினை இஸ்ரேல் நிராகரித்தது.
மேலும் காசாவின் ரபா நகரில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் வெளியேறும்படி இஸ்ரேல் அறிவுறுத்தியது. பின்னர் அங்கு தனது ராணுவத்தை களமிறக்கிய இஸ்ரேல் அங்கு தற்போது கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் காசாவின் மையப்பகுதியான டெய்ர் அல்-பலாஹ் நகரில் இஸ்ரேல் ஒரு மருத்துவமனையை உருவாக்கி வருகிறது. இது ரபா நகரில் இருந்து வெளியேறும் பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக அமைக்கப்படுகிறது.
காசா மீது போர் தொடங்கியதில் இருந்து தேவையான பகுதிகளில் மருத்துவமனைகளை இஸ்ரேலால் உருவாக்கி வருகிறது. அதன்படி இஸ்ரேலால் உருவாக்கப்படும் 8-வது மருத்துவமனை இதுவாகும். கடும் போர் சூழலிலும் மக்களை காக்க மனிதாபிமான முறையில் மருத்துவமனைகளை திறக்கும் இஸ்ரேலில் செயலுக்கு செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட சேவை அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.