இந்தியா வந்த வணிக கப்பல்.... திடீரென சரமாரியாக தாக்கிய ஹவுதி டிரோன்கள்.. ,,நடுக்கடலில் பெரும்
27 Apr,2024
பரபரப்பு
மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் தொடர்ந்து வரும் நிலையில், இந்தியாவுக்கு வரும் ஒரு கப்பலை ஹவுதி படை குறிவைத்துத் தாக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றம் தொடர்ந்து வருகிறது. ஒரு பக்கம் காசாவில் உள்ள ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல் சம்பவங்கள் பல மாதங்களாகத் தொடர்கிறது.
இது ஒரு பக்கம் என்றால் மற்றொரு புறம் காசா மீதான இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் அப்பகுதியில் செல்லும் வணிகக் கப்பல்களைக் குறிவைத்து ஏமனில் உள்ள ஹவுதி படை தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல்: இதற்கிடையே மீண்டும் அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. செங்கடலில் உள்ள ஆண்ட்ரோமெடா ஸ்டார் என்ற எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமனின் ஹவுதிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கப்பலில் சில மோசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஹவுதி படையும் இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ளனர். பனாமா கொடியுடன் பறந்து கொண்டிருந்த இந்த கப்பல் பிரிட்டன் நாட்டிற்குச் சொந்தமானது என்று ஹூவுதி செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரியா தெரிவித்துள்ளார். அதேநேரம் மிகச் சமீபத்தில் தான் அந்த கப்பலைப் பிரிட்டன் விற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் தற்போதைய உரிமையாளர் சீஷெல்ஸில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியா செல்லும் கப்பல்: இந்த டேங்கர் கப்பல் இப்போது ரஷ்யாவுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. அப்போது தான் இந்தத் தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த கப்பல் ரஷ்யாவின் ப்ரிமோர்ஸ்கில் இருந்து இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள வாடினாருக்கு சென்று கொண்டு இருந்துள்ளது. அப்போது தான் ஹவுதி படை இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் கப்பலுக்கும் உள்ளே இருந்த கப்பல் குழுவுக்கும் எந்தளவுக்குச் சேதம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஈரான் ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹவுதி படை கடந்த நவம்பர் முதல் செங்கடல், பாப் அல்-மண்டப் ஜலசந்தி மற்றும் ஏடன் வளைகுடாவில் செல்லும் வணிக கப்பல்களைக் குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இது அந்த பகுதியில் கப்பல் போக்குவரத்துக்குச் சிக்கலைத் தருகிறது. சிக்கல் ஏன்: ஹவுதி இதுபோல தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் வணிக கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. இது செலவை அதிகரிப்பதால் சர்வதேச வணிக போக்குவரத்து இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தொடர்புடைய வணிக கப்பல்களையே ஹவுதிக்களை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தன. இடையில் சில காலம் இந்தத் தாக்குதல்கள் குறைந்து இருந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் ஹவுதி தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா: இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், அப்பகுதியில் வணிக கப்பல்களைப் பாதுகாக்க பல்வேறு நாடுகளும் பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே அமெரிக்கா தனது விமானம் தாங்கி கப்பல் ஒன்றை இப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.. இது அப்பகுதியில் பயணிக்கும் வணிக கப்பல்களின் பாதுகாப்பை ஓரளவுக்கு உறுதி செய்யலாம். இருப்பினும், ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும் வரை தாக்குதல் தொடரும் என்பதை ஹவுதி படை திட்டவட்டமாகக் கூறிவிட்டது.