மீண்டும் வேலையை காட்டிய மாலத்தீவு.. சீன கப்பலுக்கு ரகசிய அனுமதி?
27 Apr,2024
சீனாவுடன் நெருக்கம் காட்டி வரும் மாலத்தீவு தற்போது மீண்டும் சீனாவின் உளவு கப்பலுக்கு அனுமதி கொடுத்துள்ளது. இந்த கப்பல் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளுக்காக மட்டுமே துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்று மாலத்தீவு தெரிவித்துள்ளது. எனினும் இதனை இந்தியா உற்று கவனித்து வருகிறது.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடு மாலத்தீவு. பூகோள ரீதியாக இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமாக மாலத்தீவு உள்ளதால், மாலத்தீவை வளைத்து போட்டு இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க சீனா முயற்சித்து வருகிறது. இதற்காக மாலத்தீவுக்கு பல கோடி கடன்களை கொடுத்து அந்த நாட்டை தங்களின் கைக்குள் வைக்க சீனா முயற்சித்து வருகிறது.
இந்தியா மாலத்தீவு உறவு: எனினும், இந்தியாவுக்கு நெருக்கமான நாடாகவே விளங்கி வந்த மாலத்தீவு, தற்போது சீனாவுடன் அதீத நெருக்கம் காட்டுகிறது. இதற்கு அங்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றமே காரணம். மாலத்தீவின் புதிய அதிபராக பதவியேற்ற முகம்மது முய்சு, சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர். இதனால், சீனாவுடன் அவர் நெருக்கம் காட்டி வருகிறார். இதற்கிடையே தான் பிரதமர் மோடி பற்றி மாலத்தீவு அமைச்சர்கள் கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், மாலத்தீவு - இந்தியா இடையேயான உறவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிசல் ஏற்படும் நிலை உருவானது. மாலத்தீவில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்றும் அதிபர் முகம்மது முய்சு உத்தரவிட்டார். சீனாவின் உளவு கப்பல்: மாலத்தீவு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைபிடித்தாலும் இந்தியா, மாலத்தீவுக்கு நெருக்கடியான தருணங்களில் கை கொடுத்தே வருகிறது. ஆனாலும் மாலத்தீவு திருந்தியபாடில்லை. இந்த நிலையில்தான், சீனாவின் உளவு கப்பலுக்கு மீண்டும் மாலத்தீவு அனுமதி கொடுத்துள்ளது. 4,500 டன் எடை கொண்ட இந்த ஹைடெக் ஆராய்ச்சி கப்பல், இரண்டு மாதங்களுக்கு முன்பாக மாலத்தீவு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.
ஆராய்ச்சி கப்பல்: இரண்டு வாரங்கள் திலாபுஷி தொழில்துறை தீவின் துறைமுகத்தில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் (Xiang Yang Hong 03) நிறுத்தப்பட்ட நிலையில் அங்கு இருந்து கிளம்பி சென்றது. இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் சீனாவின் ஆராய்ச்சி கப்பலுக்கு மாலத்தீவு அனுமதி கொடுத்துள்ளது. கடந்த முறை வரும் போதே இந்த கப்பல் நிறுத்துவதற்கு அனுமதி பெற்றதாக மட்டுமே கூறியுள்ள மாலத்தீவு, வேறு எந்த தகவலையும் கூறவில்லை. எந்த ஆய்வையும் மேற்கொள்ளாது: கடந்த பிப்ரவரி மாதம், சீன ஆராய்ச்சி கப்பல் மாலத்தீவிற்கு வந்த போது மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "இந்த கப்பல் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளுக்காக துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்றும், மாலத்தீவில் நிற்கும் போது இந்தக் கப்பல் எந்த ஒரு ஆய்வையும் மேற்கொள்ளாது” என்று தெரிவித்து இருந்தது. 66 இடங்களில் வெற்றி: மாலத்தீவில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் முகம்மது முய்சுவின் கட்சி பெரும்பான்மை இடங்களில் வென்றது. மொத்தம் உள்ள 93 இடங்களில் 66 இடங்களில் முகம்மது முய்சு கட்சிக்கு வெற்றி கிடைத்தது. சீனா ஆதரவு நிலைப்பாட்டை தீவிரமாக கடைபிடித்து வந்த முகம்மது முய்சுவின் செல்வாக்கை காட்டும் விதமாக நடைபெற்ற இந்த தேர்தலில் அவரது கட்சிக்கே வெற்றி கிடைத்தது கவனிக்கத்தக்கது.
உற்று கவனிக்கும் இந்தியா: மாலத்தீவில் தற்போது முகாமிட்டு இருக்கும் கப்பலான Xiang Yang Hong 03 கடந்த 2016 ஆம் ஆண்டு சீன கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த கப்பலை சீனா, ஆழ்கடல் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றிற்கு ஈடுபடுத்துகிறது. நீருக்கடியில் கனிம ஆய்வு மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் பற்றிய ஆய்வுகளுக்கும் இந்தக் கப்பலை பயன்படுத்த முடியும். இந்தியாவில் இருந்து 15,000 நாட்டிக்கல் மைல்ஸ் தொலைவில் உள்ள மாலத்திவில் தற்போது சீனாவின் இந்த ஆராய்ச்சி கப்பல் நிறுத்தப்பட்டு இருப்பதால், இந்தியாவும் இதை உன்னிப்பாக கவனித்து வருகிறது.