தென்கொரியாவுக்கு சொந்தமான 2 தீவுகளை நோக்கி வடகொரியா குண்டுகளை வீசி பதற்றம்.!
05 Jan,2024
தென்கொரியா: தென் கொரியாவுக்கு சொந்தமான 2 தீவுகளை நோக்கி வடகொரியா திடீரென ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தென்கொரியாவிற்கு சொந்தமான யோன் பியோங் தீவுக்கு அருகில் வட கொரியா தாக்குதல் நடத்தியுள்ளது. பீரங்கிகள் மூலம் 200-க்கும் மேற்பட்ட ஷெல் குண்டுகளை தென்கொரிய தீவுகளை நோக்கி வீசி வடகொரியா தாக்குதல் நடத்தியிருக்கிறது. அமெரிக்கா- தென் கொரியா அண்மையில் கூட்டு போர்ப்பயிற்சி மேற்கொண்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. வட கொரியாவின் தாக்குதலில் மக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தென் கொரியா தலைமைத் தளபதி தகவல் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் இந்த நடவடிக்கை, கொரிய தீபகற்பத்தில் அமைதியை அச்சுறுத்தும் மற்றும் பதட்டத்தை அதிகரிக்கும் ஆத்திரமூட்டும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய ராணுவத்தின் திடீர் தாக்குதலை அடுத்து யோன் பியோங் தீவு பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தென் கொரிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. யோன் பியோங் தீவு மீது பீரங்கி குண்டு மற்றும் ராக்கெட் மூலம் வடகொரியா தாக்குதல் நடத்தியதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது. தென் கொரிய இராணுவம் இப்போது அமெரிக்காவுடன் தொடர்புடைய நகர்வுகளை கண்காணிக்க வேலை செய்து வருகிறது. மேலும் வட கொரியாவின் ஆத்திரமூட்டலுக்குப் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் கொரியா தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.