விண்வெளிக்கு விலங்குகளுடன் விண்கல ஓடம் அனுப்பியது ஈரான்
07 Dec,2023
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியின் ஒருபகுதியாக விலங்குகளுடன் விண்கல ஓடத்தை அனுப்பி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் கடந்த 2013ம் ஆண்டில் விண்வெளிக்கு குரங்கை அனுப்பி வெற்றிகரமாக திரும்பி கொண்டு வந்தது. மேலும் ஈரானின் புரட்சி பாதுகாப்பு படை அதன் முதல் ராணுவ செயற்கைக்கோளை கடந்த 2020ம் ஆண்டு அனுப்பியது.
மேலும் கடந்த செப்டம்பரில் தரவு சேகரிக்கும் செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தியது.
ஈரான் வரும் 2029ம் ஆண்டிற்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியின் ஒருபகுதியாக விண்கல ஓடத்தின் மூலம் விலங்குகளை அனுப்பி உள்ளதாக அந்நாட்டின் தகவல்தொடர்பு துறை அமைச்சர் இசா ஜரேபோர் தெரிவித்ததாக இஸ்லாமிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, அரசு ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், சல்மான் ராக்கெட் மூலம் 500 கிலோ எடையுடன் கூடிய விண்கல ஓடம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த விண்கல ஓடம் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.