டெல் அவிவ்: இஸ்ரேல் ராணுவத்தின் 11 நாள் போரால் காசா முனை நரகமாக மாறி உள்ளது. போரின் கொடூரம் நாளுக்கு நாள் தீவிரமடைவதால் வல்லரசு நாடுகள் மனம் மாறி வருகின்றன. காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உலக தலைவர்கள் இஸ்ரேலுக்கு விரைகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் செல்கிறார். பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் படையினர் கடந்த 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலுக்கு பதிலாக இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்துள்ளது.
11வது நாளாக இப்போர் நேற்றும் நீடித்தது. இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சால் மிகச்சிறிய பரப்பளவை கொண்ட காசா முனை முழுவதும் நரகமாக மாறி இருக்கிறது. தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து 10 லட்சம் மக்கள் காசாவின் வடக்கிலிருந்து தெற்கு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். ஆனாலும் மருத்துவமனையில் குண்டு காயங்களுடன் சிகிச்சை பெறுபவர்கள், மருத்துவர்கள், தன்னார்வலர்கள் என இன்னமும் 1 லட்சம் பேர் வடக்கு பகுதியில் தவித்து வருகின்றனர். இதனால் தரைவழி தாக்குதல் நடத்தலாமா என்பதில் இஸ்ரேல் அரசு முடிவெடுக்க முடியாமல் திணறுகிறது.
இதுவரை இப்போரில் காசாவில் பலியானோர் எண்ணிக்கை 3,000த்தை தாண்டி உள்ளது. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் 3 வயதுக்கு குறைந்த குழந்தைகள். மேலும், 1,300க்கும் மேற்பட்டோர் குண்டுவீச்சில் சரிந்த கட்டிட இடிபாடுகளுக்குள் புதைந்து இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காசாவின் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு உணவு, குடிநீர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது. காசாவில் உள்ள கடைகளில் இன்னும் ஒரு வாரத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் மட்டுமே இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.
இதனால் ஒரு ரொட்டித் துண்டு வாங்குவதற்கு கூட மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் மருத்துவமனைகள் ஜெனரேட்டர்களை நம்பி இயங்குகின்றன. இதற்கான எரிபொருள் எந்நேரமும் தீர்ந்து போகும் நிலையில் இருக்கிறது. மருந்துகளும் கடுமையான தட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் ஒட்டுமொத்த மருத்துவமனைகளும் முடங்கும் கட்டத்தில் உள்ளன. காசாவில் இருந்து வெளியேற, இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரே பாதை ரபா கிராசிங் மட்டுமே. அப்பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதால் அப்பாதையையும் எகிப்து அரசு மூடி உள்ளது.
உலக நாடுகள் பலவும் காசாவுக்கு மனிதாபிமான உதவியாக உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்த லாரிகள் ரபா கிராசிங்கில் நுழைய எகிப்து எல்லையில் மைல் நீளத்திற்கு காத்திருக்கின்றன. இந்த மனிதாபிமான உதவிகள் காசாவிற்குள் கொண்டு செல்லப்படாவிட்டால் பல உயிர்கள் பசியால் போகும் கட்டத்தில் சிக்கியிருப்பதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. காசாவில் கொண்டு செல்ல எல்லையில் 300 டன் உணவுகள் காத்திருக்கின்றன. இவ்வாறு காசா மக்களின் நரக வேதனை உலக வல்லரசு நாடுகளை மனம் மாற வைத்துள்ளது.
இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவித்து வந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை தளர்த்தத் தொடங்கி உள்ளன. காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகள் சென்றடைய வேண்டுமென்பதில் அக்கறை காட்டத் தொடங்கி உள்ளன. இதனால் மனிதாபிமான உதவிக்காக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த உலக தலைவர்கள் அடுத்தடுத்து இஸ்ரேலுக்கு படையெடுத்து வருகின்றனர். ரோமானிய பிரதமர் மார்செல் சியோலகா, ஜெர்மனி அதிபர் ஓல்ப் ஸ்கோலஸ் ஆகியோர் நேற்று டெல் அவிவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசினர்.
அப்போது, மனிதாபிமான உதவிகள் காசா மக்களுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர். இதே போல, போர் சூழலுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் செல்ல இருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் செல்லும் பைடன், பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேச உள்ளார். அதோடு ஜோர்டான் செல்லும் அவர் அந்நாட்டின் மன்னர் 2ம் அப்துல்லாவையும், பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் மற்றும் எகிப்து அதிபர் அப்தேல் பதா எல் சிசியையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
மேலும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளார். ஐநா பொதுச் செயலாளர் கட்டரஸ் எகிப்து சென்று மனிதாபிமான உதவிகள் காசாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஹமாசுடன் பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி செய்ய வேண்டுமென ஈரானை ஜப்பான் அரசு வலியுறுத்தி உள்ளது. இதனால், மனிதாபிமான உதவிகளுக்காக காசாவில் விரைவில் இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
* 18 நேபாள நாட்டினருடன் 286 இந்தியர்கள் வருகை
ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் சிக்கி உள்ள இந்தியர்களை ஒன்றிய அரசு அழைத்து வருகிறது. இதன்படி, சிறப்பு விமானம் மூலம் நேற்று டெல் அவிவில் இருந்து 286 இந்தியர்கள் டெல்லி வந்தனர். இவர்களுடன் நேபாளத்தை சேர்ந்த 18 பேரும் விமானத்தில் அழைத்து வரப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
* வான்வழி தாக்குதலில் 80 அப்பாவிகள் பலி
நேற்றும் காசாவின் ரபா, கான் யூனிஸ் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. ஹமாஸ் படையினர் பதுங்கியுள்ள இடங்கள், அவர்களின் தலைமையகம் உள்ளிட்ட கட்டிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறினாலும், இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பொதுமக்களே பலியாகி உள்ளனர். ரபாவில் 27 பேரும், கான் யூனிசில் 30 பேரும் கொல்லப்பட்டதாக ஹமாஸின் மூத்த அதிகாரியும் முன்னாள் சுகாதார அமைச்சருமான பசீம் நைம் தெரிவித்துள்ளார். கான் யூனிசில் உள்ள மருத்துவமனைக்கு ரத்த வெள்ளத்தில் 50 சடலங்கள் கொண்டு வரப்பட்டதாக ஏபி செய்தி நிறுவன நிருபர் தெரிவித்துள்ளார்.
* ஹமாஸ் ராணுவ தலைவர் பலி
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் நெவாடிம் விமான தளத்தில் கடற்படை விமானிகள் மத்தியில் பேசுகையில், ‘‘எங்கள் விமானங்கள் காசாவில் எங்கும் தாக்கும். ஒவ்வொரு ஏவுகணையும் இலக்குகளை தகர்க்கும் திறன் கொண்டது. எனவே ஹமாஸ் படையில் ஒருவரையும் உயிருடன் விடமாட்டோம். அவர்கள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் சாக வேண்டும். இந்த 2 வாய்ப்புகள் மட்டுமே அவர்களுக்கு உள்ளது’’ என்றார். இதற்கிடையே, இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹமாஸ் ராணுவத்தின் மத்திய காசா படைப்பிரிவின் தலைவர் அயமன் நோபன் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு நேற்று உறுதி செய்தது.