உலகின் உயரமான ஜீயஸ் நாய் புற்றுநோயால் உயிரிழப்பு
13 Sep,2023
கின்னஸ் சாதனை படைத்த உலகின் உயரமான நாயான ஜீயஸ் (Zeus) புற்று நோயால் 3 வயதில் உயிரிழந்தது. அதற்கு நாய் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எலும்பில் ஏற்பட்ட புற்று நோயால் ஜீயஸ் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நேற்று இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த ஜீயஸ் 3 அடி 4.18 இன்ச் உயரம் கொண்டதாக (1.046 மீட்டர்) இருந்தது.
இதன் மூலம் உலகிலேயே அதிக உயரம் கொண்ட நாய் என்ற கின்னஸ் சாதனையை ஜீயஸ் கடந்த 2022 மார்ச் மாதம் ஏற்படுத்தியிருந்தது. அப்போது, ஜீயஸ் குறித்து சர்வதேச அளவில் செய்திகள் வெளிவந்து பெயரும் புகழும் குவிந்தன. 3 வயது பெண் நாயான ஜீயஸ் மீது நெட்டிசன்களும் அதிக அன்பு செலுத்தினர். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் ஜீயஸிற்கு எலும்பு புற்று நோய் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜீயஸ் உயிர் பிழைக்க வேண்டும் என்றால் அதற்கு வலது காலை நீக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சைக்கு கூடுதல் செலவு ஆகும் என்பதால் அதன் உரிமையாளர்கள் பொது தளத்தில் உதவி கேட்டனர். 8 ஆயிரம் அமெரிக்க டாலர் தேவைப்பட்ட நிலையில் ஜீயஸிற்கு 12 ஆயிரம் டாலர் வரை கிடைத்துள்ளது.
இதையடுத்து மருத்துவர்கள் கடந்த 7 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இது வெற்றிகரமாக முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அடுத்த 3 நாட்களில் சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் ஜீயஸ் சரிவர சாப்பிடவில்லை. மிகவும் பலவீனமாக காணப்பட்டதுடன் எப்போதும் படுத்திருந்தது. மேலும் உயிரிழப்பதற்கு முன்பாக லேசான காய்ச்சலும் ஜீயஸிற்கு ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்கள் பரிசோதித்ததில் ஜீயஸிற்கு நிமோனியா காய்ச்சல் இருந்ததும், அதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அதற்கு தீவிர சிகிச்சை கொடுத்து பார்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை ஜீயஸ் உயிரிழந்தது. அதற்கு நாய் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.