தங்கத்தை விற்க ஏடிஎம் மிஷின்.. 30 நிமிடங்களில் வங்கி அக்கவுண்டில் பணம்..!
22 Apr,2025
தங்கத்தை விற்பனை செய்ய இனிமேல் கடைக்கு சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கென ஏடிஎம் மிஷின் வந்துவிட்டது. அந்த ஏடிஎம் மிஷினில் தங்கத்தை கொடுத்தால், அதுவே தங்கத்தை தரம் பார்த்து விலையை நிர்ணயம் செய்து, அரை மணி நேரத்தில் பணத்தை வங்கி கணக்கிற்கு அனுப்பி விடுகிறது. ஆனால், இந்த மெஷின் தற்போது சீனாவில் அறிமுகம் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தங்க ஏடிஎம் மெஷின், தங்கத்தை பகுப்பாய்வு செய்து, உருக்கி எடை போட்டு, அவற்றின் தூய்மையை சரிபார்த்து, அதற்கு சமமான தொகையை விற்பனையாளரின் வங்கி கணக்கில் மாற்றும் வகையில் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தில் 3 கிராம் எடைக்கு மேல் உள்ள தங்க பொருட்களை விற்பனை செய்யலாம். அதேசமயம், தங்கத்தின் தூய்மை நிலை குறைந்தபட்சம் 50 சதவீதம் இருக்க வேண்டும்.
இந்த மிஷனுக்கு சீனா பொதுமக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும், நீண்ட வரிசையில் நின்று தங்களுடைய தங்கத்தை இந்த மிஷினில் கொடுத்து விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, சீனாவின் மற்ற நகரங்களிலும் இந்த மெஷின் நிறுவப்படும் என்று கூறப்படும் நிலையில், இந்தியாவிலும் விரைவில் இந்த மிஷன் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.