புதிய முயற்சிஸ செயலிழந்த செயற்கைகோள் பூமிக்கு கொண்டுவரப்பட்டதுஸ
29 Jul,2023
செயலிழந்த செயற்கைகோளை பூமிக்கு கொண்டு வருவதற்காக கடந்த சில மாதங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன
விண்வெளி வரலாற்றில் முதன் முறையாக செயலிழந்த செயற்கைகோள் பூமிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து விட்டதாக தி கார்டியன் இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. யோலஸ் (Aeolus) என்ற செயற்கைகோள் வானிலையை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் விண்ணில் செலுத்தப்பட்டது.
இதனை பிரிட்டனை சேர்ந்த அறிவியலாளர்கள் வடிவமைத்திருந்தனர். இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 320 கிலோ மீட்டர் உயரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிலை நிறுத்தப்பட்டது. வானிலை மாற்றம் குறித்த தகவல்களை இந்த செயற்கைகோள் தொடர்ந்து அளித்து வந்த நிலையில், சமீபத்தில் செயலிழந்து விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இதனை பூமிக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் அட்லாண்டிக் பகுதியில் யோலஸ் செயற்கை கோள் நேற்று விழுந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்த எரிபொருள் அனைத்தும் தீர்ந்து விட்டதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
செயலிழந்த செயற்கைகோளை பூமிக்கு கொண்டு வருவதற்காக கடந்த சில மாதங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சூழலில் யோலஸை பத்திரமாக தரையிரங்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலன் அளிக்காவிட்டாலும், அது அட்லாண்டிக் பகுதியில் விழுந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று பூமியில் இருந்து 280 கிலோ மீட்டர் உயரத்திற்கும், இதன் பின்னர் 250, 230 கிலோ மீட்டர் உயரங்களுக்கும் கொண்டு வரப்பட்டது. கடைசியாக அட்லாண்டிக் பகுதியில் விழுவதற்கு 5 மணி நேரத்திற்கு முன்பாக செயற்கைகோள் 120 கிலோ மீட்டர் உயரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதன்பின்னர் கட்டுப்பாட்டை இழந்து அட்லாண்டிக்கில் யோலஸ் விழுந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.