ஸ்மார்ட் போன்களில் மூழ்கி கிடப்பவர்களுக்கு உடல் பருமன், கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம்
28 Jul,2019
தற்போதைய நவீன உலகில் ஸ்மார்ட் போன் என்பது வாழ்வில் இன்றியமையாத பொருளாகிவிட்டது. ஸ்மார்ட் போன்கள் பல்வேறு நன்மைகளை அளித்தாலும் இளைய தலைமுறையினர் இதில் அதிக நேரம் செலவிடடுவதால் உடல் மற்றும் மனதளவில் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
இந்நிலையில் அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் மாற்றம் குறித்து 19 முதல் 20 வயதிற்குட்பட்டவர்களிடம் ஆய்வு ஒன்றை கொலோம்பியா நாட்டின் சிமோன் போலிவர் பல்கலை கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். 700 ஆண்கள், 300 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை அளித்துள்ளது.
ஒருவர் நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் முதல் அதற்கு அதிகமான நேரம் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதால் உடல் உழைப்புக்கான நேரம் முற்றிலும் குறைந்து விடுகிறது. இதனால் உடல் பருமன் ஏற்படுகிறது. மேலும், ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய் போன்ற உயிரை கொல்லும் கொடிய நோய்கள் உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதிக நேரம் ஸ்மார்ட் போனில் மூழ்கி கிடப்பதால் தனிநபரது நடத்தை மற்றும் ஒழுக்கத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால், மனரீதியிலான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. எனவே, ஸ்மார்ட் போனில் எப்போதும் மூழ்கி கிடக்கும் நபர்களின் இறப்பு என்பது சராசரி மனிதர்களின் இறப்பு காலத்தை விட மிக விரைவாக அமைந்து விடுகிறது என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.