
குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பயனாளர்களுக்கு எச்சரிக்கை
தங்களுடைய கம்ப்யூட்டர்களில், கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களைப் பயன்படுத்துவோர், உடனே அவற்றினை தற்போதைய பதிப்புடன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என, இந்தியாவில், இணையத் தாக்குதல்களுக்கு எதிரான அமைப்பாக இயங்கி வரும் Computer Emergency Response Team of India ((CERTIn)) மையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய இணைய வெளியில், ஹேக்கிங் என அழைக்கப்படும் கம்ப்யூட்டரை வைரஸ் அல்லது மால்வேர் மூலம் கைப்பற்றும் தொழில் நுட்பத்திற்கு எதிரான எச்சரிக்கைகளை இந்த அமைப்பு வழங்கி வருகிறது.
இந்த இரண்டு பிரவுசர்களையும் மையமாகக் கொண்டு பல வைரஸ்கள் முடுக்கி விட்டிருப்பதாக இந்த மையம் அறிவித்துள்ளது. இவற்றிலிருந்து தப்பிக்க, இந்த பிரவுசர்களின் இன்றைய பதிப்பிற்கு அனைவரும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
குறிப்பிடப்படும் வைரஸ்கள், இந்த பிரவுசர்கள் வழியாகக் கம்ப்யூட்டரை அடைந்து தங்கள் வேலையைக் காட்டும் போது, தேவையற்ற பைல்கள், இணையத்திலிருந்து டவுண்லோட் செய்யப்படும். கம்ப்யூட்டரின் மெமரி கரப்ட் ஆகும். தனிநபர் தகவல்கள், நிதி சார்ந்தது உட்பட, திருடப்பட்டு, வைரஸை அனுப்பிய ஹேக்கர்களுக்குச் செல்லும்.
பயர்பாக்ஸ், தண்டர்பேர்ட் மற்றும் ஸீ மங்க்கி பயன்படுத்துபவர்கள் உடனடியாக அப்கிரேட் செய்திடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பயர்பாக்ஸ் பதிப்பு 27.0 க்கு முந்தைய பதிப்புகள் வைத்து இயக்குபவர்களும், தண்டர்பேர்ட் பதிப்பு 24.3 க்கு முன் வைத்திருப்பவர்களும், ஸீ மங்க்கி பதிப்பு 2.24 க்கு முன் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருபவர்களும், கூகுள் குரோம் பதிப்பு 32.0.1700.102க்கு முந்தையதை வைத்திருப்பவர்களும், கட்டாயம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் – குரோம் இயக்க முறைமைகள்
கூகுள் நிறுவனம் தயாரித்து வழங்கும் இரண்டு வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் தான் ஆண்ட்ராய்ட் மற்றும் குரோம். ஆனால், இவை இரண்டும் வெவ்வேறான பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கிடையேயான வேறுபாட்டினை இங்கு பார்க்கலாம்.
ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் மொபைல் போன் இயக்க சாப்ட்வேர் தொகுப்பாகும். இது மொபைல் போன் இயங்குவதற்கான
ஆப்பரேட்டிங் சிஸ்டம், மிடில்வேர் எனப்படும் அப்ளிகேஷனைத் தொடர்பு படுத்தும் சாப்ட்வேர் மற்றும் முக்கிய, அத்தியாவசியத் தேவைகளுக்கான அப்ளிகேஷன்கள் அடங்கிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் வகையில், ஏறத்தாழ ஒரு லட்சத்து 50 ஆயிரம் அப்ளிகேஷன்கள், இணையத்தில் கிடைக்கின்றன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக உயர்ந்து கொண்டே போகிறது.
தொடக்கத்தில், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, 2003ல் தொடங்கப்பட்ட Android OS Inc என்ற நிறுவனம் உருவாக்கியது. ஆனால், 2005 ஆம் ஆண்டில், கூகுள் இதனை வாங்கியது. தொடர்ந்து அதன் பல்வேறு பதிப்புகளை உணவுப் பொருட்களின் பெயர்களோடு, ஆங்கில எழுத்துக்களின் அகரவரிசையில் வெளியிட்டது. தற்போது அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்டது ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4 ஆகும்.
டேப்ளட் போன்ற சாதனங்களிலும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் 3.0 (Honeycomb), டேப்ளட் பி.சி.க்கள் இயக்கத்திற்கு மட்டும் என உருவாக்கப்பட்டதாகும்.
குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். இது லினக்ஸ் அடிப்படையில் உருவானது. இணைய அப்ளிகேஷன்களுடன் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டதாகும். UBUNTU என அழைக்கப்படும் இன்னொரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பதிப்பினை ஒட்டி குரோம் ஓ.எஸ். அமைக்கப்பட்டது.
குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வழக்கமான அப்ளிகேஷன்கள் எதுவும் இருக்காது. இணைய அப்ளிகேஷன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் போல, இதனை இன்ஸ்டால் செய்திடவோ அல்லது அப்டேட் செய்திடவோ தேவை இல்லை. இணைய அப்ளிகேஷன்களை, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்து, அவை சிஸ்டத்தின் இயற்கையான அப்ளிகேஷன்களாக காட்டப்படும். எளிமை, பாதுகாப்பு மற்றும் வேகம் தான், குரோம் சிஸ்டத்தின் அடிப்படை சிறப்பம்சங்களாகும்.