சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி திடீர் மரணம். பரிசோதனையில் வெளியான
30 Nov,2023
.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலை - முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான (48) சோமசுந்தரம் துரைராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தார் என குற்றம் சுமத்தப்பட்டு கடந்தவாரம் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
.
இந்தநிலையில், குறித்த நபருக்கு கடந்த 28ஆம் திகதி அன்று ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போதே சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
.
இதனையடுத்து, மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கு அமைவாக சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பாவையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்துள்ளார்.
இந்நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் போது சடலத்தின் உடலின் உட்பகுதியில் காயங்கள் காணப்பட்டதனையடுத்து சம்பவம் பற்றி திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸாரின் ஊடாக நீதிமன்ற நீதிவான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் சடலத்தை பார்வையிட்ட பின்னர் மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.