இலங்கை - இந்திய தமிழர்களுக்குள் விரிசலை உருவாக்கும் நோக்கில் ரணில் சிறீதரன் எம்.பி
10 Oct,2023
இலங்கைத் தமிழர்களுக்கும் இந்திய தமிழர்களுக்கும் ஒரு விரிசலை உருவாக்கும் நோக்கில் ரணில் செயற்பட்டு வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் வழங்கும் நோக்கில் கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடற்றொழில்
“யுத்தத்துக்கு முன்னும் பின்னரும் இந்தியாவின் ரோலர் படகுகள் பவளப்பாறை உட்பட மீன் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வடபகுதியில் உள்ள கடற்றொழிலாளர்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.
கச்சதீவில் கூட சுதந்திரமாக சென்று கடற்றொழில் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதுடன் நெடுந்தீவு கடற்ப்பரப்பிலும் மீன் உற்பத்தி பெரும் வீழ்ச்சிகண்டுள்ளது.
இதன் காரணமாக கடற்றொழிலாளர் குடும்பங்கள் தமது இலக்கை அடைய முடியாத நிலையில் காணப்படுகின்றனர். பல பகுதிகளில் அட்டைப் பண்ணைக்கு வழங்கப்பட்டு மீன் உற்பத்தி பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக சகோதரர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது தமிழக கடற்றொழிலாளர்களையும் இலங்கையில் உள்ள வடபகுதி தமிழ் கடற்றொழிலாளர்களையும் அடி பட வைத்து இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியா தமிழர்களுக்கும் ஒரு விரிசலை உருவாக்கும் நோக்கில் ரணில் செயற்பட்டு வருகின்றார்.
அத்துடன் எங்களுக்கு ஆதரவு தரக்கூடியவர்கள் மற்றும் எங்களோடு சேர்ந்து வரக்கூடிய அனைவரையுமே பிரித்து அவர்களுக்கிடையே கசப்பான உணர்வுகளை ஏற்படுத்த நோக்கிலே செயற்பட்டு வருகின்றார்.
மேலும் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எடுத்துரைத்து எங்களுடைய கடற்பரப்பில் எங்களுடைய கடற்றொழிலாளர்களின் கடற்றொழிற்கு இடையூறு அளிக்க வேண்டாம் என எடுத்த கூறி அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.