தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லையென்றால், அவருடைய மரபணு பரிசோதனை அறிக்கையை பகிரங்கமாக வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் ஏன் மறுக்கின்றது என்று உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் உள்ள எனது கடவுச்சீட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் பெறப்பட்டுள்ளது. தற்போது கணிசமான இடைவெளியில் எனது இருப்பினை உறுதிப்படுத்தும் நிகழ்வுகளும் தொடருகின்றன.
அவ்விதமான நபராக உள்ள நான் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஆளாக எவ்வாறு இருக்க முடியும் என்றும் சீற்றமாக கேள்வி எழுப்பினார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமாக இருக்கின்றார் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்ததன் பின்னரான சூழலில் இலங்கை இராணுவம் அதனை நிராகரித்துள்ளமை மற்றும் அக்கருத்துக்களுக்கு எதிராக வெளிப்படுத்தப்பட்டுள்ள பிரதிபலிப்புக்கள் தொடர்பில் வீரகேசரியிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதலாவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமாக இருக்கின்றார் என்ற பழ.நெடுமாறனின் கருத்துடன் நான் முழுவதுமாக உடன்படுகின்றேன். இதற்கு சில காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, இறுதிப்போரின் போது பிரபாகரனுடன் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட போராளிகளில் யாரும் இதுவரையில் அவர் இறந்துவிட்டார் என்ற தகவலை பகிரங்கமாக தெரிவிக்கவில்லை.
அடுத்ததாக, இலங்கை இராணுவம் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும், அவருடைய மரபணு பரிசோதனை அறிக்கை தங்களிடத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளது.
இலங்கை இராணுவத்தினை பொறுத்தவரையில், அவர்கள் எமது எதிரிகள். அவர்களிடத்தில் உண்மையாகவே மரபணு பரிசோதனை அறிக்கை காணப்படுமாக இருந்தால், அதனை வெளியிடுவதில் தயக்கம் காண்பிப்பது ஏன் என்பதே பிரதான கேள்வியாகிறது.
போர் நிறைவடைந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகின்ற நிலையில், இலங்கை இராணுவம் இன்னமும் பரிசோதனை அறிக்கையை வெளியிடத் தயங்குகின்றது என்றால் அதன் பின்னால் ஏதோ மர்மங்கள் உள்ளன என்பது வெளிப்படையான விடயமாகிறது.
இதேநேரம் தற்போது பிரபாகரன் இருப்பதாக விடுக்கப்பட்ட அறிவிப்பு வடக்கு, கிழக்கு மக்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று பலர் கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். உண்மையில் அது தவறானதாகும். எமது நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் அச்சத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்படும் என்பதே யதார்த்தமாகும்.
அதேநேரம் பிரபாகரன் நலமாக இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள கருத்தினை தொடர்ந்து நாம் எவருக்கோ எடுபிடிகளாக செயற்படுகின்றோம் அல்லது நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றோம் என்ற விமர்சனங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, இந்திய மத்திய அரசாங்கத்தினால் அல்லது உளவுத்துறையினரால் இயக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றார்கள். அவ்வாறானவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
நான் தாயகத்திலிருந்து வெளியேறி தமிழகத்துக்கு வருகை தந்த பின்னர் எனது கடவுச்சீட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் பறிக்கப்பட்டது. நான் இந்தியாவுக்குள்ளே சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமையில் தான் உள்ளேன்.
இது பலர் அறிந்திருக்காத விடயம். அதுமட்டுமன்றி, நான் இப்போதும் எனது இருப்பினை பாதுகாப்பு அதிகாரிகளிடத்தில் அவ்வப்போது உறுதிப்படுத்த வேண்டிய நிலைமைகள் இருக்கின்றன.
அவ்வாறான நிலையில் நான் மத்திய அரசாங்கத்தின் ஆளாக இருக்க முடியுமா?
அதேநேரம் தமிழகத்தில் உள்ள சில திராவிட சக்திகள் மத்திய அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவையாக உள்ளன. எம்மை பொறுத்தவரையில், எமது விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் மத்தியில் எவர் ஆட்சியில் இருந்தாலும், அத்தரப்புக்களுடன் முறையான அணுகுமுறைகளை செய்ய வேண்டியுள்ளது.
இந்த நிலைப்பாட்டில் தான் பிரபாகரன் கூட இறுதியான காலத்தில் இருந்தார். அதற்கு அவருடைய இறுதி மாவீரர் உரையும் சான்றாகின்றது.
மேலும், வடக்கு, கிழக்கில் உள்ள இந்து ஆலயங்கள் பௌத்தத்தின் பெயரால் அதிகமாக ஆக்கிரமிக்கப்படுகின்றன. ஆகவே, அவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பதால் என்னை ஒரு இந்து வெறியனாக சித்திரித்து பா.ஜ.க.வுடன் இணைத்துப் பார்க்கின்ற தரப்பினரும் உள்ளனர். அது தவறானதாகும்.
கள யதார்த்தத்தினை வெளிப்படுத்துகின்றபோது மத ரீதியான முத்திரை குத்தப்படுவது பொருத்தமற்ற செயற்பாடாகும். தாயகத்தில் பள்ளிவாசலோ தேவாலயமோ பௌத்தத்தின் பெயரால் ஆக்கிரமிக்கப்படும்போது அதற்கு எதிராகவும் நான் குரல் கொடுப்பேன் என்றார்.