எழிலன் உள்ளிட்டோர் குறித்த வழக்கில் பெப்ரவரி 14இல் தீர்ப்பு!
                  
                     17 Dec,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	 
	தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு, அடுத்த வருடத்துக்கு தவணையிடப்பட்டு உள்ளதாக, சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.
	 
	    
	இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தால், நேற்று அறிவிக்கப்படவிருந்தது. இந்நிலையில், மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
	 
	இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இறுதிப் போரின் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவுக்கான தீர்ப்பு, நேற்று வழங்கப்படவிருந்தது எனவும் இந்த வழக்கு தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று, அந்த நீதிமன்றம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது எனவும் அந்த அறிக்கை மீதான வவுனியா மேல் நீதிமன்றின் தீர்ப்பு, வழங்கப்படுவதாக இருந்தது எனவும் கூறினார்.
	 
	எனினும், அந்தத் தீர்ப்பு இன்னும் தயாரித்து முடிக்கப்படவில்லை என்று வவுனியா மேல் நீதிமன்றம், தமக்கு அறிவித்துள்ளது எனவும், அவர் தெரிவித்தார்.
	 
	அத்துடன், எதிர்வரும் வருடம் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்ற விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், அவர் கூறினார்.