யாழில் தமிழர்களை அச்சுறுத்திய பொலிஸார்!
23 Nov,2019
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் நகர சபையின் பொது மைதானத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளோரை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் வீடியோ எடுத்து வருகின்றனர்.
வல்வெட்டித்துறை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்பில் தாம் அங்கு துப்புரவு பணியில் ஈடுபடுவோரையும் வாகனங்களையும் வீடியோ பதிவு செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபி அமைந்திருந்த நகர சபை பொது மைதானத்தை துப்புரவு செய்யும் பணி வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தலைமையில் ஆரம்பமானது.
அதன்போது நகர சபைக்குச் சென்ற வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொது மைதானத்தை துப்புரவு செய்வதை இடைநிறுத்துமாறு சபைச் செயலாளரிடம் தெரிவித்தார்.
எனினும் தவிசாளரின் முடிவின் அடிப்படையிலேயே துப்புரவு பணி இடம்பெறுவதாகவும் தன்னால் அதனைத் தடுக்க முடியாது என்றும் செயலாளர் பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில் பொது மைதானத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளோரை ஒவ்வொருவராக வீடியோ பதிவு செய்து வருகின்றனர் எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.