தமிழ் இளைஞர்களுக்கு இடையூறு விளைவிக்கும் இராணுவம்!
24 May,2019
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவில் இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாத குறை மிக நீண்டகாலமாக நிலவி வருகின்றது.
அந்த வகையிலே இளைஞர்கள் தங்களுக்கான ஒரு விளையாட்டு மைதானத்தை உருவாக்கித் தருமாறு பலதடவை பலரிடம் கூறி வந்த நிலையில் அண்மையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் குறித்த இளைஞர்களது கோரிக்கைக்கு அமைவாக ஐந்து இலட்சம் ரூபா நிதி குறித்த ஒரு மைதானத்தை அமைப்பதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய திருமுறிகண்டி பகுதியில் மைதானம் ஒன்றை துப்பரவு செய்யும் பணியில் இளைஞர்கள் பிரதேச செயலகத்தின் உடைய அனுமதி கடிதத்தோடு ஈடுபட்டிருந்தனர். குறித்த வேலைகள் இடம்பெற்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பல பகுதிகள் துப்பரவாக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட இன்னும் ஒரு பகுதி துப்பரவாக்க வேண்டிய நிலை இருக்கின்ற நிலையில் அந்தப் பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் அங்கே வருகை தந்து அந்த இடம் தங்களுக்குரிய இடம் எனவும் அதனை துப்பரவு செய்ய வேண்டாம் எனத் தடுத்து நிறுத்தியதோடு அந்த இடத்தினை வேலி அடைத்து வைத்து இளைஞர்களை அந்த இடத்திற்கு செல்ல விடாது தடுத்து வைத்திருக்கிறார்கள்.
குறித்த விடயம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு இளைஞர்கள் தங்களுக்கு தரப்பட்ட காணியை இராணுவம் தடுத்து நிறுத்தி உள்ளதாக தெரிய படுத்தியுள்ளனர் இதுவரை அந்தக் காணியை மீட்டு அவர்களுடைய விளையாட்டு மைதானம் அமைப்பதற்குரிய ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படவில்லை என இளைஞர்கள் அங்கலாய்க்கின்றனர்.
ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் பல காணிகள் பொது மக்களுடைய காணிகள் ராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மீண்டும் மீண்டும் ராணுவத்தினரால் பொதுமக்களது தேவைகளுக்கான காணிகள் சுவீகரிக்கப்படும் இவ்வாறான வேலைகள் இடம் பெற்றுக் கொண்டு வருவதற்கு பலரும் விமர்சனம் தெரிவிக்கின்றனர்.