இலங்கையில் அவசர நிலை ஒரு மாதம் நீடிப்பு
22 May,2019
இலங்கையில் கடந்த மாதம் 21–ந்தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 250–க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். உலக நாடுகளை உலுக்கிய இந்த சம்பவத்தை அரங்கேற்றிய பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணிகளில் இலங்கை அரசு தீவிரமாக இறங்கியது. குண்டுவெடிப்பை தொடர்ந்து அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்நிலையில், பொது பாதுகாப்பை சுட்டிக்காட்டி, அவசர நிலையை ஒரு மாதம் நீட்டித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். இதற்கான அரசிதழ் அறிவிப்பாணை வெளியானது.
அவசரநிலை சட்டப்படி, யாரை வேண்டுமானாலும் கோர்ட்டு அனுமதியின்றி கைது செய்யவோ, விசாரணை நடத்தவோ போலீசாருக்கும், ராணுவத்துக்கும் அதிகாரம் உள்ளது.