பிரெஞ்சு தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 60 இலங்கை அகதிகள்!!
01 May,2019
பிரான்சுக்கு சொந்தமான Reunion தீவில் சட்டவிரோதமாக வந்து இறங்கிய இலங்கை அகதிகள், சிறப்பு விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து சிறிய படகு மூலம் Reunion தீவினை 120 அகதிகள் வந்தடைந்திருந்தனர். அவர்கள் 60 பேர் நேற்று திங்கட்கிழமைமை திருப்பி இலங்கைக்கே அனுப்பப்பட்டுள்ளனர். ஏப்ரல் 13 ஆம் திகதி இவர்கள் மிக ஆபத்தான பயணமாக சிறிய படகு ஒன்றில் 4,000 கி.மீ பயணித்து Reunion தீவினை வந்தடைந்திருந்தார்கள். இதற்காக இவர்கள் €2,000 இல் இருந்து €5,000 வரை கட்டணமாக செலுத்தியிருந்தார்கள். மூன்று இந்தோனேஷிய மீனவர்கள் இவர்களை கடலில் வழிகாட்டியாக செயற்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர்கள் வரும் மே 15 உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
கடந்த மார்ச் 2018 இல் இருந்து மொத்தமாக 273 அகதிகள் Reunion தீவுக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் இன்னும் 130 பேர் திருப்பி அனுப்பப்படுவதற்காக காத்திருக்கின்றனர் எனவும் அறியமுடிகிறது. Reunion தீவின் பொது செயலாளர் Frederic Joram தெரிவிக்கும் போது <<சட்டவிரோத குடியேற்றம் சந்தேகமே இல்லாமல் தடைசெய்யப்பட்ட ஒன்று>> என குறிப்பிட்டுள்ளார்.