அரசியல் பலத்தை காண்பித்திருந்தால், அரசியல் கைதிகள் விடுதலை சாத்தியமாகியிருக்கும் -
                  
                     16 Oct,2018
                  
                  
                      
					  
                     
						
	
	தமிழ்தேசிய கூட்டமைப்பு தன்னிடம் உள்ள அரசியல் பலத்தை காண்பித்திருந்தால் அரசியல் கைதிகள் விடுதலை சாத்தியமாகியிருக்கும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை சிந்திக்கவே தயாராக இல்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உருப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
	அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.
	மேலும் தெரிவிக்கையில் ,
	சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் பேசி தீர்க்கவேண்டிய காலம் இந்த அரசாங்கம் ஆட்சியை பொறு ப்பேற்றதன் பின்னரான 6 மாதங்கள் அல்லது 1 வருடங்களாகும்.
	அதற்குள் பேச வேண்டியதை பேசி, செய்யவேண்டியதை செய்திருக்கவேண்டும். காரணம் அப்போது எதிரணியில் உள்ளவர்கள் முடங்கியிருந்தார்கள். இன்று அவ்வாறான நிலை இல்லை. தேர்தல் காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை,  காணி விடுவிப்பு,  மீள்குடியேற்றம், காணாமல்போனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பேசினார்கள். \
	ஆனால் ஒன்றும் பூரணமாக அல்லது திருப்தி படும் வகையில் தீர்க்கப்படவில்லை.
	குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது அரசியல் பலத்தை காண்பித்திருக்கவேண்டும். அவர்களுக்கு அந்த அரசியல் பலம் இருந்தது. ஆனாலும் அவர்கள் அதனை பயன்படுத்தவில்லை.
	மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பிரச்சினைகளை பேசி அதனடிப்படையில் அனைவரும் இணைந்து அரசாங்கத்துடன் பேச்சுவார் த்தைகளை நடாத்தவேண்டும்.
	அரசியல் கைதிகளுக்காக அனுராதபுரம் நோக்கி நடந்து சென்ற மாணவர்களும் சொல்லியுள்ளார்கள். அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கோரிக்கையை நாங்கள் சிறைச்சாலை வரையில் கொண்டுவந்திருக்கிறோம். அதற்கு அப்பால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றில் இந்த விடயத்தினை தீர்க்கவேண்டும் என கூறியுள்ளனர்.
	ஆகவே சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்க த்துடன் பேசுவதன் ஊடாக சிறந்த பயனை பெறலாம். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு தங்கள் கட்சிக்குள்ளேயே இதுபற்றி பேசுவதாக தெரியவில்லை என்றார்.a