எமது உரிமையைத் தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை! - முதலமைச்சர் சீற்றம்
26 May,2018
எமது மாகாணத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து முடிவெடுக்கும் உரிமை எமக்கே உண்டு. அவற்றைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று, வட மாகாணசபைக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டமை தொடர்பாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றார்கள். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள முதலமைச்சர்,
“வட மாகாணத்தில் நடப்பவற்றுக்கு நாமே பொறுப்பானவர்கள். எமக்கு மற்றவர்கள் கூற வேண்டிய அவசியமில்லை. எமக்கு இருக்கும் அதிகாரங்களை குறைத்து விட்டு மேலும் அந்த அதிகாரங்களைத் தாங்கள் எடுக்க நினைக்கின்றார்களோ தெரியவில்லை.
அவர்களின் கருத்துகளுக்கு எமக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை. எமது மாகாணத்தில் நடக்கும் சம்பவங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் உரிமை எமக்கே உண்டு. அவற்றைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.
அத்துடன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அன்று பல சர்ச்சையான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வடமாகாண சபை ஒழுங்கமைப்பில் நடைபெற்றதா? அல்லது பல்கலைக்கழக மாணவர்கள் தலைமையில் நடைபெற்றதா? என மீண்டும் கேள்வி எழுப்பியபோது, நினைவேந்தலில் பல சர்ச்சiயான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், எதிர்வரும் வருடம் 10ஆவது வருடம் என்றபடியால், மக்கள் அனைவரும் இணைந்து செய்யக்கூடிய வகையில் தற்போதிலிருந்தே, அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
கடந்த நினைவஞ்சலியின் போது பல குறைபாடுகள் இருந்தாக சுட்டிக்காட்டியுள்ளார்கள். எதிர்வரும் வருடம் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்வில் அந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்.
கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கி ஊழியர்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. வங்கிகளுக்கு ஒரு விதிமுறைகள் உள்ளது. அந்த விதிமுறைகளுக்கு அமைவாக அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
வடமாகாண சபை மற்றும் அதன் மக்கள் தமது மனோநிலைகளை வெளிப்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதன் அடிப்படையில் அந்த நினைவஞ்சலி நிகழ்வில் ஏற்பட்ட சில குறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். அதனடிப்படையில் சில முடிவுகளை முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடப்பாடு! - அமெரிக்க தூதுவர்
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடப்பாடு என்று இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். “ இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கின்றது அதேவேளை இன்னமும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளன. பிரகாசமான எதிர்காலம் என்ற இலங்கையின் கனவை நனவாக்குவதற்காக இலங்கையுடன் கைகோர்த்து பயணிப்பதற்கு அமெரிக்கா விரும்புகின்றது.
இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு இலங்கையே தலைமை தாங்க வேண்டும், காயங்களை ஆற்றக்கூடிய பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கக் கூடிய நல்லிணக்க முயற்சியை இலங்கையே முன்னெடுக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது என அமெரிக்கா மாத்திரமல்ல இலங்கையும் ஐ.நா செயற்பாடுகள் மூலம் உறுதி வழங்கியுள்ளது. இலங்கை வெற்றியடைய வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம், இலங்கையுடனான எங்கள் உறவுகள் விஸ்தரிக்கப்படுவதற்காக பெருமளவு முதலிட்டுள்ளோம்.
இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கின்றது. அதேவேளை இன்னமும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளன. இலங்கை யுத்தத்திற்கு பிந்திய காலத்திற்குள் நுழையும் இந்த தருணத்தில் ஜனநாயகத்தை பலப்படுத்தும் இந்த வேளையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றும் பொறுப்பு இலங்கையுடையது.
2016 ம் ஆண்டு சுதந்திரக் கொண்டாட்டங்களை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைத்த சிலரில் நானும் ஒருவன். தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்ட வேளை வளர்ந்தவர்கள் கூட கண்ணீர் விடுவதை மாத்திரம் நான் பார்க்கவில்லை, ஐம்பது வருடத்திற்கு பின்னர் அரச நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை பார்த்து கண்ணீர் சிந்தப்படுவதையும் நான் பார்த்திருக்கின்றேன்.
இதுவே நல்லிணக்கத்தின் பலம்,மிக மோசமான துயரம் மற்றும் மனவேதனைகளிற்கு பின்னர் காயங்கள் ஆற்றப்படுவதன் பலம் இது. நாங்கள் சமமான வாய்ப்புகளையே கோருகின்றோம்.நாங்கள் மிக நீண்ட காலமாக இந்தோ பசுபிக்கில் நிலை கொண்டுள்ளோம். நாங்கள் வெளிப்படையான சுதந்திரமான இந்தோ பசுபிக்கினை விரும்புகின்றோம்.அனைவருக்கும் பலனளிக்க கூடிய சர்வதேச முறையை நாங்கள் விரும்புகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.