இலங்கையை ஐ.நாவில் இனியும் தப்பவிடாதீர்!
23 Feb,2018
“ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசு தாமதம் காட்டி வருகின்றது. எனவே, இலங்கை அரசு சர்வதேசத்துக்கும் இலங்கை மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை அமெரிக்காவும், சர்வதேச சமூகமும் உறுதிசெய்ய வேண்டும். அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை அரசுக்கு இனிமேல் கால அவகாசம் வழங்கவே வேண்டாம்.”
– இவ்வாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
இலங்கை வந்துள்ள அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ் சென்சென்ப்ரெக்னெர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட் பைசென்ஸேனிஸ் ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தச் சந்திப்பின்போது அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பிலும் அதன் பின்னர் உள்ள அரசியல் நிலைமை தொடர்பிலும் இரா.சம்பந்தன் எடுத்துரைத்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், “இந்த நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு சாதகமான முடிவை எட்டவேண்டும்” எனத் தெரிவித்தார்.
அதேவேளை, புதிய அரசியலமைப்புக்கு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் ஆணையைப் பெறவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பில் கருத்துக் கூறிய இரா.சம்பந்தன், இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளது எனவும் எடுத்துரைத்தார்.
இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட தாமதங்களைச் சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், இலங்கை அரசு சர்வதேசத்துக்கும் இலங்கை மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை அமெரிக்காவும், சர்வதேச சமூகமும் உறுதிசெய்ய வேண்டும் எனவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், இலங்கை அரசுக்கு இனிமேல் கால அவகாசம் வழங்கவேண்டாம் எனவும் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்