வடக்கு, கிழக்கில் ‘தொங்கு’ சபைகள் – சிறுகட்சிகள், சுயேட்சைகளுக்கு கொண்டாட்டம்
local-election results (2)புதிய தேர்தல் முறையினால் வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பகுதிகளில் உள்ள மூன்று உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சபைகளிலும், பிற கட்சிகளின் அல்லது சுயேட்சைக் குழுக்களின் ஆதரவுடனேயே ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 35 உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
எனினும், 40 உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பதாக இன்று மாலை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
திருகோணமலையில்- 02, யாழ்ப்பாணத்தில்- 13, கிளிநொச்சியில் – 03, மன்னாரில் – 02, வவுனியாவில்- 03, முல்லைத்தீவில் -04, மட்டக்களப்பில் -05, அம்பாறையில் -03 என மொத்தம் 35 சபைகளை கூட்டமைப்பு இதுவரை வெற்றி கொண்டுள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் இரண்டு உள்ளூராட்சி சபைகளில் ஈபிடிபியும், இரண்டு சபைகளில் தமிழ் காங்கிரசும் அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளன.
எனினும், பூநகரி மற்றும் வெருகல் பிரதேச சபைகளில் மாத்திரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஊர்காவற்றுறையில் ஈபிடிபியும் தனித்து ஆட்சியமைக்கக் கூடிய பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 11 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ள போதிலும், பெரும்பான்மை இன்றி சமபலநிலையே காணப்படுகிறது.
வட்டார ரீதியாக அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய போதிலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், போதிய விகிதாசார ஒதுக்கீட்டு ஆசனங்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாநகர சபைகள், மன்னார், வவுனியா, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, சாவகச்சேரி, திருகோணமலை உள்ளிட்ட நகரசபைகள் மற்றும் ஏனைய பிரதேச சபைகளில், எந்தக் கட்சியும் தனித்து ஆட்சிமைக்கக் கூடிய அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 33 சபைகளிலும், தமிழ் காங்கிரஸ் 2 சபைகளிலும், ஈபிடிபி 1 சபையிலும், ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளன.
பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு உள்ளக பேச்சுக்கள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.
புதிய தேர்தல் முறை சிறிய கட்சிகள், சுயேட்சைக் குழுக்களுக்கு சாதகமானதாக இருந்தமையினால், ஆசனங்களைப் பெற்ற அத்தகைய தரப்புகளின் ஆதரவை பிரதான கட்சிகள் நாடத் தொடங்கியுள்ளன.
யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டான தமிழ்த் தேசிய பேரவை எதிர்கட்சியாக விஸவரூபம் எடுத்துள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் மொத்தமாக இருந்த 416 ஆசனங்களில் 84 ஆசனங்களை பெற்று இரண்டாவது கட்சியாக தன்னை அடையாளப்படுத்தி உள்ளது. ஆசன விகிதத்தில் கூட்டமைப்பு 36% த்தினையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 20%த்தினையும் பெற்றது வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 104513 வாக்குகளையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 64580 வாக்குகளையும் பெற்றுள்ளன.
81 ஆசனங்களை பெற்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 3ஆவது இடத்தை தக்கவைத்தது. நான்காவது இடத்தை 32 ஆசனங்களைப் பெற்ற சிறீலங்கா சுதந்திரக்கட்சியும், 25 ஆசனங்களை பெற்ற ஐக்கியதேசியன் ட்சி 5ஆவது இடத்தையும், 21 ஆசனங்களை பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியும் பெற்றன.
மாவட்ட ரீதியாக தனித்து ஒரு கட்சி பெற்ற அதி கூடிய 150 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றாலும், அதற்கு எதிராக இறங்கிய ஏனைய கட்சிகள் சுயேட்சைகள் 266 ஆசனங்களைப் பெற்றுள்ளன.
இந்த வகையில் யுத்தத்தின் பின்னரான தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை போன்று இதுவரை சவால்களை யாழில் எதிர்கொள்ளவில்லை. 2018 உள்ளூராட்சி தேர்தல் தமிழ்த்தேசிய முன்னணியின் எழுச்சியாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரிவாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.இதேவேளை 80களில் வீறுகொண்ட ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்காலில் மௌனிக்கும் வரையும், இலங்கையின் பிரதான தேசியக் கட்சிகள் இரண்டும் யாழ் மாவட்டத்தில் தனித்து நிலைகொள்ள முடியாத நிலை நிலவியது. அதன் பின்னரான காலப்பகுதியில் இரண்டு கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும் ஒருவர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்றார்.
இருந்த போதும் இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் இரண்டு பேரினவாதக் கட்சிகளுக்கும் முறையே 32 – 25 என்ற வகையில் 57 ஆசனங்களை பெற்றுள்ளன. ஆயின் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வாகும் நிலை தென்படுகிறது.
அடுத்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 81 ஆசனங்களை பெற்று தன்னை மீள் நிர்மானம் செய்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த, வகிக்கும் கட்சிகள் புலிகளால் அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது. கடந்த பொதுத்தேர்தலில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் புளொட்டிற்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தார்.அதன் ஊடாக இந்தக் கட்சிகளின் அரசியல் பயணம் தொடர்கிறது.
ஆனால் ஏறத்தாள 2 தசாப்தங்களாக ஆளும் அரசுகளோடு ஆட்சியில் பங்கெடுத்து தமிழ் தேசியத் தரப்புகளால் துரோகப் பட்டியலில் இணைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசயக் கட்சிகளில் இருந்து வெளிவந்து, தமது வீணைச் சின்னத்தில் போட்டியிட்டு தனது வாக்கு வங்கியை நிரூபித்து அதன் பின்னரான 3 வருட காலப்பகுதியில் தடியூன்றிப் பாய்ந்து மக்களின் ஊடான அங்கீகாரத்தை பெற்று இருக்கிறார்.
மறுபக்கம் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய சுரேஸ்பிறேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எவ் அணி பாரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 21 ஆசனங்களையே பெற்றிருக்கிறது. வடமாகாண அமைச்சர் ஒருவரையும், நாடாளுமன்ற உறுப்பினரையும், மாகாண சபை உறுப்பினர்களையும் கொண்ட சுரேஸ் பிறேமச்சந்திரனின் தமிழ்த் தேசியப் பிடிப்பிற்கும், அரசியல் தொடர்ச்சிக்கும் இந்த ஆசன எண்ணிக்கை மிகக் குறைவானதே.
இந்தக் கட்சிகளைத் தாண்டி சுயேட்சைகள் தமது தனிப்பட்ட ஆளுமைகளை பிரபல்யத்தை முன்னிறுத்தி 23 ஆசனங்களை பெற்றிருக்கிறார்கள். ஆக இந்த உள்ளூராட்சி சைபைத் தேர்தல் தமிழ்க் கட்சிகளுக்கு படிப்பினையாகவும், அனுபவமாகவும் அமையுமா?