கடல் வழி ஹஜ் பயணம் விரைவில் துவக்கம்
08 Jan,2018
இந்திய பயணியர், கடல் மார்க்கமாக, 'ஹஜ்' புனித யாத்திரை மேற்கொள்ளும் நடவடிக்கையை மீண்டும் துவங்கும்படி, மத்திய அரசு வைத்த கோரிக்கையை, சவுதி அரேபிய அரசு ஏற்றுள்ளதாக, மத்திய அமைச்சர், முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்து உள்ளார்.
மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர், முக்தார் அப்பாஸ் நக்வி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் இருந்து, அரபு நாடான, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்கள், மும்பை - ஜெட்டா வரை, கடல் மார்க்கமாக பயணிக்கும் நடைமுறை, ஏற்கனவே இருந்தது. 1995ல், கடல் வழி போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இந்நிலையில், கடல் வழி ஹஜ் பயணத்தை மீண்டும் துவங்கும்படி, மத்திய அரசு, சவுதி அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.
இதை, சவுதி அரசு ஏற்றுள்ளது. இரு நாட்டு அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின், விரைவில் இந்த சேவை துவங்கப்படும். இதன் மூலம், ஹஜ் புனித யாத்திரை சென்று வருவதற்கான செலவு, பெரும் அளவில் குறையும்.
மேலும், ஆண் துணை இன்றி, ஹஜ் பயணம் செல்ல விரும்பும், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, முதன்முறையாக, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அவர்களுக்கு, தனியாக போக்குவரத்து மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்படும். இவர்களுக்கு துணையாக, ஒரு பெண் உதவியாளரும் நியமிக்கப்படுவார். இதற்காக இப்போதே, 1,300 பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.