இலங்கையின் தலைமை அமைச்சரான ரணில் விக்கிரமசிங்க இந்தியத் தலைமை அமைச்சருடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார். இதன்போது இந்தியத் தரப்பிலிருந்து இலங்கைக்கு உதவிகள் வழங்குவது தொடர்பாக சாதக மான சமிக்ஞைகள் காட்டப்பட்டுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரையில் எந்த விடயத்தை எடுத்துக்கொண்டாலும் சொந்தக் காலில் நிற்கக்கூடிய வல்லமையை அது கொண்டி ருக்கவில்லை என்பது தெரிந்த விடயம் தான்.
பிற நாடுகளிடம் கடன்பெற்றோ அல்லது உதவிகளைப் பெற்றோதான் தனது தேவைகளை நிறைவு செய்து கொள்வதை இந்த நாடு வழக்கமாக்கிக் கொண்டுள்ளது.தற்போது வெளி நாடுகளிடமிருந்து அளவுக்கு மீறிப் பெற்றுக்கொண்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றது.
மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் சீனா அதிக வட்டிக்கு பெரும் தொகையான கடன்களை இலங்கைக்கு வழங்கியது. கேள்வி கேட்பதற்கு எவருமில்லாத நிலையில் மகிந்த தலைமையிலான அரசு அவற்றைச்செலவிட்டது. நாட்டுக்குத் தற்போது பெரும் சுமைகளாக மாறியுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகம்,மத்தள வானூர்தி நிலையம் ஆகியவை பெரும் தொகையான நிதியைச் செலவிட்டு அமைக்கப்பட்ட போதிலும், அவை பயன்படாத நிலையில் காணப்படுகின்றன.
ஆனால் அவற்றுக்கு செலவிடப்பட்ட கடன்தொகை வட்டியுடன் சேர்ந்து நாட்டு மக்களின் தலையை நெரித்து வருகின்றது. ஆட்சியில் இருப்பவர்கள் விடுகின்ற தவறுகள் இறுதியில் நாட்டு மக்களையே பாதித்து விடுகின்றன.
மோடியின் தலைமையிலான அரசுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அக்கறை கிடையாது
இலங்கையைப் பொறுத்த வரையில் சீனாவுடனும், இந்தியாவுடனும் உறவைக்கொண்டிருக்கவே அந்த நாடு விரும்புகின்றது. தனது பொருளாதார தளம்பல் நிலையை சமாளிக்க வேண்டுமென்றால் இதைத்தவிர வேறு வழியொன்றும் இந்த நாட்டுக்கு இல்லை. இலங்கை கேந்திர முக்கியத்துவம் மிக்கதொரு இடத்தில் அமைந்துள்ளதால், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இலங்கையு டன் சுமூக உறவு கொண்டிருக்கவே விரும்புகின்றன.
இந்தியத் தலைமை அமைச்சர் மோடி யுடனான சந்திப்பின்போது ரணில் விக்கிரமசிங்க இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பாகக் கதைத்தாரா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. அவ்வாறு கதைத்ததற்கான அறிகுறியும் தென்படவில்லை. மோடி கூட அனைத்து வழிகளிலும் இந்தியா இலங்கைக்கு உதவுமென்ற உறுதிமொழியை வழங்கினாரே தவிர, தமிழர்கள் தொடர்பாக வாயைத் திறக்கவேயில்லை.
இந்தியத்தலைமை அமைச்சர் தாம் இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது தமி ழர்கள் தொடர்பாக வழங்கிய வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
இந்திராகாந்தி அம்மையாரின் மறைவுக்குப்பின்னர் ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அம்மையார் ஈழத் தமிழர்கள் மீது நிறையவே அனுதாபமுள்ளவராகத் திகழ்ந்தார்.
1983 ஆம் ஆண்டு இடம் பெற்ற இனக்கலவரத்தில் தமிழர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். இதையறிந்த அம்மையார் இந்தியாவின் அயலுறவுத்துறை அமைச்சராக
விருந்த பி.வி.நரசிம்மராவை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். அவரது வருகை கலவரத்தைத் தணிப்பதற்குப் பெரிதும் உதவியது.
தமிழ் இளைஞர்களது ஆயுதப் போராட்ட முயற்சிக்கு ஆதரவளித்த இந்திராகாந்தி
இலங்கையின் சிங்கள அரசுகள் தமிழர்களுக்கு எதுவுமே செய்யா என்பதை நன்குணர்ந்து கொண்ட இந்திரகாந்தி அம்மையார் தமிழ் இளைஞர்களுக்குப் ஆயுதப் பயிற்சிகளை இந்தியாவில் வைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.இந்த இளைஞர்களே இலங்கையில் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து நடத்தினார்கள்.
ஆனால் அம்மையாரின் அகால மறைவுக்கு பின்னர் ஆட்சி்க்கு வந்த அவரது புதல்வரான ராஜிவ்காந்தி இலங்கை அரசுக்குச் சார்பான கொள்கைகளையே கொண்டிருந்தார். எந்தவிதமான சட்ட வலுவும் இல்லாத ஒப்பந்தம் ஒன்றை இலங்கை அரசுடன் இவர் செய்து கொண்டார். இதன் மூலமாக வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டதாகப் பெரிதாகக் கூறப்பட்ட போதிலும் நீதிமன்றத் தீப்பொன்றின் பிரகாரம் அந்த இணைப்பு இல்லாதொழிக்கப்பட்டது.
விடுத லைப் புலிகளை குறுகிய காலத்துள் ஒழித்துவிடுவது என்ற நோக்கோடு இங்கு அனுப்பி வைக்கப்பட்ட அமைதிப்படை என்ற பெயர் தாங்கிய இந்தியப்படைகள் தமிழர்களுக்குச் செய்த அட்டூழியங்கள் வரலாற்றில் மறக்க முடியாதவை. இறுதியில் தமது நோக்கத்தில் தோல்வி யுற்று தாய் நாட்டுக்கு வெறும் கையு டன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை இந்தியப் படைகளுக்கு ஏற்பட்டது. பெரும் உயிரிழப்புக்களையும் அவை எதிர்கொண்டன. ராஜிவ் காந்தியின் படுகொலையின் பின்னர் ஈழத்தமிழர்கள் மீதான அனுதாபம் இந்திய அரசிடமிருந்து முற்றாகவே மாறிவிட்டது.
இறுதிப் போரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு உதவிய இந்தியா
இறுதிப்போரின்போது இந்தியா இலங்கை அரசுக்கு சகல வகையிலும் உதவியது. புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என்ற எண்ணமே அந்த நாட்டிடம் நிறைந்து காணப்பட்டது. தமிழ்மக்களைப் பற்றிய சிந்தனை சிறிதுகூட அதனிடம் காணப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமை கூட இந்தியாவின் மனச்சாட்சியை உலுப்பவில்லை.
ஆனால் இலங்கை அரசுக்கான அதனது ஆதரவு தொடரத்தான் செய்கின்றது. சீனா இலங்கையில் கால் பதிப்பதை விரும்பாத இந்தியா இலங்கையை அரவணைத்துச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றது.
இந்தியத் தலைமை அமைச்சர் மோடி யும் ஈழத்தமிழர்களைக் கைவிட்டு விட்டார் என்றுதான் கூற வேண்டும். அவர் இலங்கைக்கு வருகை தந்த போது கூறிய வார்த்தைகளையும் அவர் மறந்து விட்டார்.
ஈழத்தமிழர்கள் இலவு காத்த கிளியின் நிலையில்தான் தற்போது உள்ளனர். தமது பிரச்சினைகளுக்கெல் லாம் தீர்வு கிடைக்குமென்ற அவர்களது நம்பிக்கை நிறைவேறுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. இவர்கள் இனியும் இந்தியாவை நம்பியிருப்பதில் பயனொன்றும் கிடைக்காது. ஏனென்றால் தீர்வுக்கான ஒளிக்கீற்றை வெகு தூரத்தில் கூட காண முடியவில்லை.