இந்தோனேசிய தடுப்பு முகாமொன்றில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஜெயதேவ் (வயது – 36) என்ற இளைஞன் இவ்வாறு வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் தமிழகத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த சுமார் 450 தமிழ் அகதிகள் இந்தோனேசிய தடுப்பு முகாம்களில் உள்ளதாகவும், இவர்களில் சிலர் மூடிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து புலம்பெயர்ந்து தமிழக அகதி முகாமொன்றில் தங்கியிருந்த குறித்த இளைஞன், அங்கிருந்து படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டு இந்தோனேசிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.
ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்தினால், இந்தோனிஷியாவின் மிலான் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருவதாக ஐ.பி.சி.தமிழ் செய்திகளிடம் அழுது புலம்பியுள்ளனர்.
ஐந்து வருடங்களுக்கும் மேலாக எந்தவிதமான உதவிகள் இல்லாமலும் கவனிப்பார் இன்றியும் தமது பிள்ளைகளுடன் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டதாகவும் அவர்கள் கண்ணீர்மல்க கூறுகின்றனர். நோய்கள் ஏற்பட்டால் சிகிச்சைகள் கூட மறுக்கப்படுவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஏனைய நாடுகளைச் சேர்ந்த அகதிகள், மேற்குலக நாடுகளில், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளினால் குடியமர்த்தப்படுகின்றனர்.
ஆனால் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக தங்களை தொடர்ந்தும் அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் முறையிட்டுள்ளனர்.
பலர் தாயகத்தில் தங்கள் குடும்பங்களை விட்டு தனியாக வந்துள்ளனர். அவர்கள் எந்தவிதமான தொடர்புகளும் இன்றி தவிக்கின்றனர்.
தங்களில் பலருக்கு மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் வேறு சிலர் நடைப்பிணமாக திரிவதாகவும் கூறி அவர்கள் அழுது புலம்புகின்றனர்.
சேறு சகதிகள் நிறைந்த, மலசல கூட வசதிகள் அழுக்காக உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் ஐ.பி.சி.தமிழ் செய்திகளுக்கு வேதனைடன் கூறுகின்றனர்.
மனித சமூகம் இருக்க முடியாத இடத்தில், சுமார் ஐந்து ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த அகதிகள் தாயகத்தில் இருந்து படகுகள் மூலம் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.