பெண்களை இலக்கு வைத்தேகடன்கள் வழங்கப்படுகிறது: மக்கள் தெரிவிப்பு
08 Oct,2017
நுண்கடன் நிறுவனங்கள் இலகுவான முறையில் அதிக வட்டிக்கு நுண் கடன்களை மக்களுக்கு வழங்கி வருகின்றார்கள். குறிப்பாக அதிகமாக பெண்களை இலக்கு வைத்தே இந்த நுண் கடன்கள் வழங்கப்படுகிறது. இதன் பின்னர் கடனை அறவிட வருகின்ற நிதி நிறுவனங்களைச் சேர்ந்த நபர்கள் அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதோடு அலுவலக நேரங்களுக்கு பின்னரும், சில இடங்களில் இரவு நேரங்களிலும் கடன் அறவீட்டுக்கு வருகின்றார்கள்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு தேவைகளுடன் வாழ்கின்றனர். வறுமை அதிகமாக காணப்படும் பிரதேசமாகவும் இந்த மாவட்டங்கள் காணப்படுகிறது. எனவே இங்கு மக்களிடம் இலகுவாக கடன்களை வழங்க கூடிய சூழ்நிலைகளே காணப்படுகிறது. இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் நிதி நிறுவனங்கள் மக்களிடம் அதிக வட்டிக்கு வாராந்த கடன், மாதாந்த கடன் என வழங்கி வருகின்றார்கள் எனவும் பெண்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும் அரச மற்றும் வணிக வங்களில் கடன்களுக்கு காணப்படுகின்ற இறுக்கமான நடைமுறைகளும் நுண்கடன் நிறுவனங்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது எனவும் மத்திய வங்கியின் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டதோடு, இந்த நுண் கடன் முறைக்கு மத்திய வங்கியும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் வங்கிகளை கட்டுப்படுத்த வேண்டிய மத்திய வங்கி இவா்களை கட்டுப்படுத்த தவறியது தொடர்பிலும் மத்திய வங்கியின் அளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இது தொடா்பில் கருத்து தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி நிதி நிறுவனங்களின் நுண் கடன் ஒரு கொள்ளை கடன் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும். தற்போது நாங்கள் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் எதிர்பார்கின்றோம் இருக்கின்ற கடன் முறைகளை எவ்வாறு தடை செய்வதுஇ அல்லது குறைப்பது. புதிய கடன்களை எப்படி வழங்குவது, கடன் பற்றி மக்களுக்கு எவ்வாறு வழிப்புணர்வு வழங்குவது என்பது தொடர்பில் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
மேலும் கடன்களை நிறுத்திவிட முடியாது. கடன்கள் மூலம் முதலீடுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் வடக்கு மக்களிடம் அதிகம் கடன்களை வழங்கி அதிக வட்டியை பெற்றுக்கொள்ளப்படுகின்ற போதும் அவை வடக்கில் முதலீடு செய்யப்படுவதில்லை எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.