ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தின் 9ஆம் ஆண்டு நினைவு தினம்
2004 சுனாமி. இலங்கையில் பல பகுதிகளில் பதிவான வீடியோக்கள்
26 Dec,2013

ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தின் 9ஆம் ஆண்டு நினைவு தினம்
ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தின் 9ஆம் ஆண்டு நினைவு தினம் பலத்த சோகத்திற்கும் மத்தியில் மட்டு-மாவட்டத்தில் அனுஷ்டிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தின் 9ஆம் ஆண்டு நினைவு தினம் பலத்த சோகத்திற்கும் மத்தியில் 26-12-2013 இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமியால் முற்றாக பாதிக்கப்பட்ட கல்லடி, நாவலடி, டச்பார், புதுமுகத்துவாரம் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிகளில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி விஷேட வழிபாடுகளில் மக்கள் ஈடுபட்டு அஞ்சலி செலுத்தியதுடன் சுனாமியில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய விஷேட பூசைகளும் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில் கறுப்பு வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
இதேபோன்று கல்லடி திருச்செருந்தூரில் பலத்த சோகத்திற்கு மத்தியில் பல்வேறு பூசை வழிபாடுகள், அன்னதானம் வழங்கல் என்பனவும் இடம்பெற்றன. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களான இரா. துரைரட்ணம், பிரசன்னா இந்திரகுமார்மற்றும் மும்மதப் பெரியார்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிகளில் அவர்களின் குடும்பத்தினர் அழுது புழம்பிய காட்சிகள் எமது கெமராக்களில் பதிவாகின.
இதேவேளை 2004ம் ஆண்டு 12 மாதம் 26 திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரழிவின் போது உயிர் நீத்தவர்களின் ஞாபகார்த்தமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் வேண்டுகோளுக்கமைவாக இன்று காலை 09.25 முதல் 09.27மணி வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்றதற்கமைவாக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.