முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ஔிரும் வாழ்வு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் அலுவலகத்திற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்றுள்ளார்.
அந்தவகையில் ஔிரும்வாழ்வு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் செயலாளர் குமாரவேலு அகிலனின் அழைப்பையேற்று இவ்வாறு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மாற்றுவலுவுடையோரது குடும்பங்களினதும், முன்னாள் போராளிகளின் குடும்பங்களினதும் வாழ்வாதார மற்றும் கல்விமேம்பாடு குறித்து ஆராய்ந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஔிரும்வாழ்வு மாற்றுத்திறனாளிகள் அமைப்பானது மாற்றுவலுவுடைய குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு, மாற்றுவலுவுடைய பிள்ளைகளின் கல்வி மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட விடயங்களில் தமது சேவைகளையாற்றிவருகின்றது.
அந்தவகையில் ஔிரும்வாழ்வு மாற்றுத்திறனாளிகள் அமைப்பானது விசேட தேவையுடையோருக்கான விசேட கல்வியை வழங்கும் செயற்பாட்டில் எழுத்தறிவித்தல், மகிழ்வூட்டல், தொழிற்கல்வி உள்ளிட்ட விடயங்களில் கவனஞ்செலுத்தி வருகின்றது.
இந்நிலையில் தற்போது புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்தின்கீழ் இயங்கிவரும் குறித்த அமைப்பினை, வலயக்கல்விப் பணிமனையின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அவ்வாறு வலயக்கல்விப்பணிமனையின் கீழ் குறித்த ஔிரும் வாழ்வு அமைப்பு கொண்டுவரப்பட்டால் விசேட தேவையுடையோருக்கான கற்றல் செயற்பாடுகளை இன்னும் வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு உதவியாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை பெரும்பாலான மாற்றுவலுவுடையோரின் குடும்பங்களுக்கு 'அஸ்வெசும' கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லையெனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அனைத்து மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கும் 'அஸ்வெசும' நலன்புரிக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்தோடு கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக்காலத்தில் தொழில்களில் ஈடுபடும் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு வட்டிவீதம் குறைந்த இலகுமுறை கடன் வழங்கப்பட்டதாகவும், தற்போது வழங்கப்படுவதில்லை என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டதுடன், தொழில்செய்யும் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு இலகு முறை கடன் வழங்கும் செயற்பாட்டை மீண்டும் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதேபோல் கடந்த கால ஆட்சியாளர்களால் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா வாழ்வாதாரக் கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும், அந்த வாழ்வாதாரக் கொடுப்பனவு அனைத்து புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. எனவே குறித்த அவ்வாறு வாழ்வாதார கொடுப்பனவு வழங்கப்படாத முன்னாள் போராளிகளுக்கு அந்தக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமெனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதேவேளை படுக்கையிலுள் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பிற்கான விசேட கொடுப்பனவு, மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவக்கொடுப்பனவு, இருக்கைமலசல கூடவசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான கோரிக்கைகளும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டது.
இந்திலையில் தம்மிடம் எழுத்துமூலமான கோரிக்கைகளைக் கையளிக்குமாறு கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த கோரிக்கைகள் தொடர்பாக தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.
மேலும் இதன்போது ஔிரும் வாழ்வு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பராமரிப்பிலுள்ள விசேடதேவையுடைய பிள்ளைகளுடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர், அவர்களின் கலைநிகழ்வுகளையும் பார்வையிட்டார்.