தையிட்டியில் அரங்கேறிய காவல்துறையினரின் அராஜகம்
21 Dec,2025
தையிட்டியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது இந்து மதத்தலைவர் தாக்கப்பட்டமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத இனவாத - மதவாத வெறிச்செயல் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் (K.Sugash) தெரிவித்துள்ளார்.
அத்துடன் தையிட்டியில் அரங்கேறிய சம்பவத்திற்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “இன்றைய தாக்குதல்களும் கைதுகளும் அநுரகுமார தலைமையிலான JVP - NPP அரசாங்கத்தின் இனவாதக் கோர முகத்தையே காட்டுகின்றது.
எங்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்களே ஒருகணம் சிந்தியுங்கள்! இன்று இந்து மதத்தலைவருக்கு நடந்தது நாளைக்கு உங்களுக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம். நாங்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்துத்தான் என்பதை மறவாதீர்கள்.
போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்! இனத்துக்கான போராட்டம் தொடரும். இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை“ என குறிப்பிடப்பட்டுள்ளது.