யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது!
07 Dec,2025
யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில், வரவேற்பு வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ‘அணையா விளக்கு’ போராட்ட நினைவுத்தூபி, இனந்தெரியாத விஷமிகளால் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 7, 2025) மீண்டும் உடைத்து எறியப்பட்டுள்ளது.
இந்த நினைவுத் தூபி, செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரியும் ‘மக்கள் செயல்’ எனும் இளையோர்களால் கடந்த ஜூன் மாதம் நடந்த போராட்டத்தின் நினைவாக அமைக்கப்பட்டது.
தொடரும் அத்துமீறல்!
அமைதி வழியில் நீதி கோரும் இந்த நினைவுத்தூபி, கடந்த ஒக்டோபர் மாதமும் விஷமிகளால் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தப்பட்டிருந்தது.
அன்றைய தினமே அது மீண்டும் நிறுவப்பட்ட போதிலும், தற்போது இரண்டாவது முறையாக உடைத்து எறியப்பட்டுள்ளது.
மக்கள் உணர்வுகளுடனும் போராட்டக் கோரிக்கைகளுடனும் தொடர்புடைய ஒரு நினைவுச் சின்னம் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவது கவலை அளிக்கிறது.